எது.. இந்தியா மாதிரி உங்களுக்கு சலுகையா? அதெல்லாம் முடியாது.. பாகிஸ்தானுக்கு ரஷ்யா நோஸ் கட்
வாஷிங்டன்: ரஷ்யாவிடம் இருந்து இந்தியா சலுகை விலையில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து வரும் நிலையில், தங்கள் நாட்டிற்கும் 30-40 சதவீத சலுகையில் கச்சா எண்ணெய் வழங்குமாறு பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ரஷ்யா நிராகரித்துள்ளது. இதனால், பாகிஸ்தான் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளது.
உக்ரைன் மீது கடந்த பிப்ரவரி மாதம் ரஷ்யா போர் தொடுத்தது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் எச்சரிக்கையை கண்டு கொள்ளாத ரஷ்யா, தங்கள் நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க இந்த போரை தொடங்கியிருப்பதாக கூறி உக்ரைன் மீது தாக்குதல் நடத்த தொடங்கியது.
போலந்தில் விழுந்த ஏவுகணைகள்.. நேட்டோவை சீண்டும் ரஷ்யா.. அவசர ஆலோசனையில் இறங்கிய 'பென்டகன்'
ரஷ்யா உக்ரைன் போர்
இந்த போர் சுமார் 8 மாதங்களை கடந்து தற்போதும் நீடித்து வருகிறது. ரஷ்யா - உக்ரைன் போரால் பெரும் பொருளாதார பாதிப்புகளும் ஏற்பட்டு வருகின்றன. சர்வதேச விநியோக சங்கிலி பாதிக்கப்பட்டு பணவீக்கமும் அதிகரித்துள்ளது. இதற்கிடையே, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் எச்சரிக்கையை மீறி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால் கோபம் அடைந்த அமெரிக்கா, ரஷ்யா மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது.
பொருளாதார தடை
ஐரோப்பிய நாடுகளும் ரஷ்யா மீது பொருளாதார தடைகளை விதித்தன. இதனால், ரஷ்யா தன்னிடம் உள்ள கச்சா எண்ணெயை மலிவு விலையில் வழங்க முன்வந்தது. இந்த வாய்ப்பை இந்தியாவும் பயன்படுத்தி ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. இந்த விவகாரத்தில் அமெரிக்காவின் எச்சரிக்கையை இந்தியா பொருட்படுத்தவில்லை. இன்னும் சொல்லப்போனால், இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு நேரடியாக பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியிருந்தார்.
சலுகை விலையில் கச்சா எண்ணெய்
இந்தியா தனது நலன் சார்ந்தே முடிவு எடுக்கும் என்று கூறினார். ரஷ்யாவின் மொத்த கச்சா எண்ணெய் ஏற்றுமதியில் மூன்றில் இரண்டு பங்கை இந்தியாவும் சீனாவும் இறக்குமதி செய்கின்றன. சீனா பெரும்பாலும் பைப்லைன் மூலமாக கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது. இந்த நிலையில், இந்தியாவுக்கு வழங்கியதை போல தங்கள் நாட்டிற்கும் சலுகை விலையில் கச்சா எண்ணெய் வழங்க வேண்டும் என்று பாகிஸ்தான் ரஷ்யாவிடம் கோரிக்கை விடுத்தது.
ரஷ்யா திட்டவட்டமாக மறுப்பு
ஆனால், ரஷ்யா பாகிஸ்தானின் கோரிக்கையை நிராகரித்துள்ளது. ரஷ்யாவுக்கு கடந்த மாதம் 29 ஆம் தேதி பாகிஸ்தானின் உயர்மட்ட பிரதிதிகள் மூன்று நாட்கள் சுற்றுப்பயணமாக சென்றுள்ளனர். இந்தப் பயணத்தின் போது ரஷ்ய அதிகாரிகளை சந்தித்து பேசிய பாகிஸ்தான் பிரதிநிதிகள், 30-40 சதவீத சலுகை விலையில், கச்சா எண்ணெய் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கின்றனர். ஆனால், தற்போது அதற்கான வாய்ப்பு இல்லை என்று ரஷ்ய அதிகாரிகள் திட்டவட்டமாக மறுத்து இருக்கின்றனர்.
கடுமையான நிதி நெருக்கடி
இதனால் எந்த முடிவும் எட்டப்படாமலே இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துள்ளது. மேலும் பாகிஸ்தான் கோரிக்கையை பரிசீலித்து தங்கள் முடிவை பிறகு தூதரக வழியாக தெரிவிப்பதாகவும் தெரிவித்து இருக்கின்றனர். ஏற்கனவே கடுமையான நிதி நெருக்கடியில் தவித்து வரும் பாகிஸ்தான், ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்து நிதி நெருக்கடியை ஓரளவு சரி கட்டலாம் என்ற திட்டத்துடன் இருந்துள்ளது.
சலுகை விலையில் வழங்க முடியாது
ஆனால், தற்போது ரஷ்யா சலுகை விலையில் வழங்க முடியாது என்று தெரிவித்துவிட்டதால் பெரும் ஏமாற்றத்துடன் பாகிஸ்தான் உயர் மட்ட பிரதிதிகள் குழு 3 நாட்கள் சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து இருக்கிறது. பாகிஸ்தானின் உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவில் அந்நாட்டு பெட்ரோலியத்துறை அமைச்சர் முசாதிக் மாலிக் மற்றும் பெட்ரோலிய துறை இணை செயலாளர் மற்றும் உயர் அதிகாரிகள் இடம் பெற்றிருந்தனர்.