செயற்கை சுவாச கருவி, பாதுகாப்பு உபகரணங்களுடன் அமெரிக்கா வந்திறங்கிய ரஷ்ய விமானம்
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் மருத்துவ பாதுகாப்பு உபகரணங்களுடன் ரஷ்யாவின் விமானம் அமெரிக்காவுக்கு வந்திறங்கியுள்ளது.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை தாண்டியது. அமெரிக்காவில் கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 5,102 ஆக உயர்ந்துள்ளது. நேற்று ஒரே நாளில் 1,049 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் அமெரிக்காவில் கொரோனா பரவும் மையமாக திகழும் நியூயார்க் நகரில் செயற்கை சுவாச கருவிகள் இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது குறித்து அதிபர் டிரம்ப் கவலை தெரிவித்தார். இதையடுத்து 100 நாட்களில் 1 லட்சம் சுவாசக் கருவிகள் தயார் செய்யப்படும் என அறிவித்திருந்தார்.
இதையடுத்து குறைந்த அளவிலான கொரோனா பாதிப்பை சந்தித்துள்ள ரஷ்யா, அமெரிக்காவுக்கு உதவ முன் வந்தது. ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின், அதிபர் டிரம்பை தொடர்பு கொண்டு பேசினார்.
தமிழகத்தில் 234 பேருக்கு கொரோனா பாதிப்பு.. மாவட்ட வாரியான பிரேக் அப் லிஸ்ட் இதோ..
அப்போது அமெரிக்காவுக்குத் தேவையான பாதுகாப்பு மருத்துவ உபகரணங்கள், செயற்கைச் சுவாச கருவிகளை அனுப்புவதாக புடின் தெரிவித்தார். ரஷ்யாவின் உதவியை டிரம்பும் ஏற்பதாக திங்கள்கிழமை தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் கொரோனா வைரஸை எதிர்த்து போராடும் வகையில் செயற்கை சுவாச கருவிகள், தனிப்பட்ட பாதுகாப்பு கருவிகள் ஆகியவற்றுடன் ரஷ்யாவின் ராணுவ விமானம் மாஸ்கோவிலிருந்து புறப்பட்டு புதன்கிழமை அமெரிக்காவின் நியூயார்க் நகரின் ஜான் கென்னடி விமான நிலையத்திற்கு வந்தடைந்தது.
60 டன் எடை கொண்ட மருத்துவப் பொருட்களில் செயற்கை சுவாசக் கருவிகள், மாஸ்க்குகள், ரெஸ்பிரேட்டர்கள் உள்ளிட்டவற்றை ரஷ்யா அனுப்பியுள்ளது. இன்னும் இரு வாரங்களில் கொரோனாவால் உயிரிழப்போரின் எண்ணிக்கை உச்சத்தை அடையும் என டிரம்ப் கூறியிருந்தது நினைவுக்கூரத்தக்கது.
பொதுவாக பிரச்சினையில் உள்ள நாடுகளுக்கு அமெரிக்காதான் தேவையான உதவிகளை அனுப்பும். ஆனால் இந்த முறை ரஷ்யாவிடம் இருந்து உதவியை வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவின் இந்த உதவியை டிரம்ப் மனிதாபிமானத்துடன் ஏற்றுக் கொண்டதாக செய்தித் தொடர்பாளர் டிமிட்டிரி பேஸ்கோவ் தெரிவித்துள்ளார். புடினுடன் தொலைபேசியில் பேசிய பிறகு ரஷ்ய உதவி குறித்து ஆர்வத்துடன் டிரம்ப் இருந்ததாகவும் டிமிட்ரி தெரிவித்தார்.