அடுத்த அதிபர் யாருப்பா.. தட் கரடியே காரித் துப்பிய மொமன்ட்.. ஜோ பிடன் ஹேப்பி அண்ணாத்தே!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோபிடன்தான் வெற்றி பெறுவார் என சைபீரிய நாட்டு கரடி ஒன்று கணித்துள்ளது. இதனால் பிடன் ஆதரவாளர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் 3-ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், முன்னாள் துணை அதிபரும் ஜோபிடனும் போட்டியிடுகிறார்கள். இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்பதை அறிய உலக நாடுகள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றன.
இந்த நிலையில் தேர்தல் நடைபெறும் இடம், வேட்பாளர்களின் நியூமராலஜியை வைத்து ஜோதிடர்கள் யார் வெற்றி பெறுவார்கள் என கணித்து வருகிறார்கள்.
ஆதரவு
அதில் டிரம்ப்தான் வெற்றி பெறுவார் என பலர் கூறுகிறார்கள். ஆனால் கருத்து கணிப்போ ஜோபிடனுக்கு ஆதரவாக உள்ளன. சைபீரிய நாட்டில் கிராஸ்னோயார்ஸ்கில் உள்ள ரோயோவ் ருச்சே தேசிய பூங்காவில்கான், பார்டெக் என்ற இரு புலிகள் உள்ளன. அது போல் புயான் என்ற கரடியும் உள்ளது.
தர்ப்பூசணி பழம்
இவைகளிடம் தர்ப்பூசணி பழத்தை கொடுத்து அதிபர் தேர்தல் வெற்றி பெறுவது யார் என கேட்கப்பட்டது. அந்த விலங்குகளுக்கு கொடுக்கப்பட்ட இரு தர்ப்பூசணிகளில் டிரம்ப் புகைப்படமும், ஜோ பிடனின் புகைப்படமும் அதில் வரையப்பட்டிருந்தது.
கண்டு கொள்ளாத புலி
அதில் முதலில் கான் எனும் வெள்ளை வங்காளத்து புலியிடம் இரு தர்ப்பூசணிகள் கொடுக்கப்பட்டன. அதில் ஜோ பிடன் உருவம் பொறிக்கப்பட்ட தர்ப்பூசணியை வைத்து விளையாடிக் கொண்டிருந்தது. ஆனால் டிரம்ப் உருவம் பொதித்ததை அந்த புலி கண்டுக் கொள்ளவேயில்லை.
தர்ப்பூசணி பழங்கள்
அது போல் பார்டெக் எனும் ஆமூர் புலியிடம் தர்ப்பூசணி பழங்கள் கொடுக்கப்பட்டன. அதுவும் ஜோபிடன் உருவம் பொதித பழத்தை வைத்தே விளையாடிக் கொண்டிருந்தது. இதையடுத்து புயான் எனும் பிரவுன் நிற கரடியிடம் தர்ப்பூசணி பழங்கள் கொடுக்கப்பட்டன.
கேள்விக்குறி
அந்த கரடியோ ஜோ பிடன் வைத்திருந்த பழத்தைக் கொண்டுதான் விளையாடிக் கொண்டிருந்தது. இந்த புயான் எனும் கரடி 2018-ஆம் ஆண்டு உலக கோப்பை கால்பந்து மற்றும் உக்ரைன் அதிபர் தேர்தல் 2019-இல் கணித்தது தவறாக இருந்தது. அதனால் தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலிலும் இந்த கரடியின் கணிப்பு கேள்விக்குறியாகியுள்ளது.