'கேலக்ஸியிலிருந்து' பூமிக்கு அடிக்கடி வரும் சிக்னல்.. அனுப்புவது யார்? தடதடக்கும் விஞ்ஞானிகள்
வாஷிங்டன்: பல சமிக்ஞைகள் பிரபஞ்சம் வழியாக பூமிக்கு அனுப்பப்படுகின்றன என்று விஞ்ஞானிகள் கூறும் தகவல், ஏலியன்கள் குறித்த யூகங்களுக்கு புது பிள்ளையார் சுழியை போட்டுள்ளது.
பூமியை தவிர பிற கோள்கள் ஏதாவது ஒன்றிலும் மனிதர்களோ, ஏலியன்களோ வாழக்கூடும் என்ற யூகங்கள் பல காலமாகவே தொடர்ந்து கொண்டுள்ளது. இப்போது அந்த யூகங்களை உறுதி செய்யும் வகையிலான சில விஞ்ஞானப்பூர்வ ஆதாரங்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன.
இப்போது வெளியாகியுள்ள சிக்னல் தொடர்பான, தகவலும் அதில் ஒன்றுதான். புதிய தரவுகள் கனடாவின், ஹைட்ரஜன் இன்டென்சிட்டி மேப்பிங் பரிசோதனை கூடத்திலிருந்து கிடைத்துள்ளது.
பிரபஞ்சம் ஆய்வு
தொலைநோக்கிகள் மூலம் படம்பிடித்தபோது, 8 எனர்ஜி வெடிப்புகள் அல்லது வேகமான ரேடியோ வெடிப்புகள் (FRB) பூமியின் மேல் நிகழ்ந்ததை, ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த மர்மமான சிக்னல்களின் மூலம் எங்கேயுள்ளது என்பதை கண்டறிய ஆராய்ச்சியாளர்கள் முயற்சிக்கிறார்கள். இந்த கண்டுபிடிப்பு, பிரபஞ்சம் பற்றிய ஆய்வில், ஒரு பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது.
சிக்னல்கள் தேவை
விஞ்ஞானிகள் முதல் FRBஐ 2007 இல் கண்டுபிடித்தனர், பின்னர் பல முறை இதுபோன்ற சிக்னல்களை கண்டறிந்துள்ளனர். 2 முறை ஆவணப்படுத்தியுள்ளனர். மீண்டும் மீண்டும் ரேடியோ வெடிப்பு சிக்னல்கள் வருவது முக்கியமானது. ஏனென்றால் அவை எங்கிருந்து வரக்கூடும் என்பதைக் கணிப்பதற்கான வாய்ப்பை ஆராய்ச்சியாளர்களுக்கு அதிகரித்து வழங்குகின்றன. மேலும் அவற்றை விரிவாகப் ஆய்வு செய்யவும் வாய்ப்பு ஏற்படும்.
பால்வீதி
ஆய்வு முடிவில் கிடைக்கும் தகவல் வியக்கத்தக்க வகையில் இருக்கலாம். பால்வீதியை தங்களுக்கு சொந்தமாகக் கொண்ட ஒரு நட்சத்திர மண்டலத்தில் இருந்துதான் இந்த சிக்னல்கள் வரக்கூடும் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதுகிறார்கள். இருப்பினும் இது குறித்து மேலும் அறிய கூடுதல் ஆய்வு செய்ய வேண்டியுள்ளதாம்.
பெரிய நிகழ்வு
FRBகள் எங்கிருந்து வருகின்றன, அல்லது அவை என்னவாக இருக்கும் என்பது யாருக்கும் தெரியாது. அவற்றின் ஆழ்ந்த தீவிரம் அவை ஏதோ ஒரு தீவிர நிகழ்வால் உருவாகி அனுப்பப்படுவதாக இருக்கலாம் என தெரிகிறது. ஒரு நட்சத்திரம் கருந்துளையில் விழுந்து ஏற்படும் சிக்னலாகவோ, அல்லது ஏலியன்களால் பிரபஞ்சம் வழியாக அனுப்பப்படும் செய்தியாகவோ இருக்கலாம்.
தொடர் ஆய்வு
இந்த ரேடியோ சிக்னல்களின் மூலத்தை கண்டறிந்து புரிந்துகொள்ள, விஞ்ஞானிகள் இன்னும் அதிக சிக்னல்களை எதிர்பார்த்துக் கொண்டு உள்ளனர். மேலும் மேலும் அவை வரும்போது அவற்றை விரிவாகப் புரிந்துகொள்ளும் வாய்ப்பும் அதிகரிக்கும். எது எப்படியோ இந்த பிரபஞ்சம் மிகப்பெரிய மாயாஜாலம்தான்.