தென்னாப்பிரிக்க கொரோனா.. "கொடூர பிரபு".. நீங்க இங்கேயும் வந்துட்டீங்களா.. அதிர்ச்சியில் அமெரிக்கா!
அமெரிக்கா: தென்னாப்பிரிக்காவில் உருவான கொரோனா வைரஸின் புதிய திரிபு முதன் முறையாக அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது.
உலகின் நம்பர்.1 வல்லரசான அமெரிக்கா, கொரோனா வைரஸிடம் சிக்கி படாதபாடுபட்டு வருகிறது. அதிகளவில் தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தாலும், கொரோனா பரவல் வேகம் தீவிரமாகவே உள்ளது.
அமெரிக்காவில் கடந்த 24 மணி நேரத்தில் 1 லட்சத்து 65 ஆயிரம் பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 கோடியே 61 லட்சத்து 30 ஆயிரத்து 188-ஆக உள்ளது. தொற்று பாதிப்பால் புதிதாக 3,862- பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா பாதிப்பில் இருந்து 1 கோடியே 58 லட்சத்து 65 ஆயிரத்து 645 பேர் இதுவரை குணம் அடைந்துள்ளனர்.
தென்னாப்பிரிக்க கொரோனா
இந்நிலையில், தென்னாப்பிரிக்காவில் உருவான கொரோனா வைரஸின் புதிய திரிபு முதன் முறையாக அமெரிக்காவில் கண்டறியப்பட்டுள்ளது. அங்கு சவுத் கரோலினா பகுதியில் இரண்டு பேருக்கு புதிய வகை கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டிருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதுமட்டுமின்றி, இந்த புதிய வகை வைரஸ் மேலும் பலருக்கும் பரவி இருக்கலாம் என்றும், அவை மிக வேகமாக பரவும் தன்மை கொண்டதென்றும், தற்போது அமெரிக்காவில் போடப்படும் தடுப்பூசிகளின் செயல்திறன் இந்த வைரஸுக்கு எதிராக குறைவாகவே இருக்கும் என்றும் அவர்கள் கவலைத் தெரிவித்துள்ளனர்.
வைரஸ் பாதித்தவர்கள் யார்?
புதிய வைரஸ் கண்டறியப்பட்ட இருவரும் தென் கரோலினாவின் வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இருவருக்கும் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. பாதிக்கப்பட்ட இருவருமே சமீபத்தில் எங்கும் பயணம் செய்யவில்லை என்று தென் கரோலினா சுகாதார மற்றும் சுற்றுச்சூழல் கட்டுப்பாட்டுத் துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
சார்லஸ்டனில் உள்ள தென் கரோலினா மருத்துவ பல்கலைக்கழகத்தின் தொற்று நோய் மருத்துவர் டாக்டர் கிருத்திகா குப்பள்ளி கூறுகையில், "இது எங்களை பயமுறுத்துகிறது"... ஏனென்றால் மாகாணத்திற்குள் இன்னும் பலருக்கும் இந்த வகை வைரஸ் இருக்கக்கூடும். இந்நேரத்திற்கு இது அதிகம் பரவி இருக்கலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
தென் கரோலினாவின் மாநில சுகாதார நிறுவனம், மாகாணத்தின் கடலோரப் பகுதியைச் சேர்ந்த ஒரு நபருக்கும், வடகிழக்கு எல்லையைச் சேர்ந்த மற்றொரு நபருக்கும் இந்த புதிய வகை தொற்று கண்டறியப்பட்டதாக தெரிவித்துள்ளது.