வாக்சின் தருவதை.. இப்போதிருந்தே மெதுவா ஆரம்பிங்க.. ஆலோசனை தரும் நிபுணர்கள்
வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் பிரிட்டனில் தயாராக கூடிய கொரோனா தடுப்பு ஊசிகளை இப்போதிருந்தே பொதுமக்களுக்கு செலுத்த ஆரம்பிக்கலாம் என்று சில சுகாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
Recommended Video
அமெரிக்காவில் உள்ள மாடர்னா மற்றும் பிரிட்டனின் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம்/ஆஸ்ட்ரா ஜெனெகா ஆகியவை தனித்தனியாக கொரோனா தடுப்பு மருந்துகளை தயாரித்துள்ளனர்.
இந்த இரண்டு தடுப்பு மருந்துகளும், மூன்றாவது கட்ட மனித பரிசோதனையில் இருக்கின்றன. பொதுவாக ஒரு தடுப்பூசி மூன்று கட்ட பரிசோதனைகளுக்குப் பிறகு பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து விடப்படுவது வழக்கம். ஆனால் இப்போது அந்த நடைமுறையை பின்பற்ற வேண்டாம் என்று சில வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள்.
எனக்கு கொரோனா அறிகுறி.. கந்த சஷ்டி புத்தகத்தோடு தனிமைப்படுத்திக் கொள்கிறேன்.. நயினார் நாகேந்திரன்
30 ஆயிரம்
அமெரிக்கா மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளிலும் தயாரிக்கப்படும் தடுப்பூசிகள் முதல் கட்ட பரிசோதனையின்போது பாதுகாப்பானவை மற்றும் செயல்பாட்டு திறன் கொண்டவை என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது. எனவேதான், தற்போது மூன்றாவது கட்ட பரிசோதனையின் போது, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தன்னார்வலர்களுக்கு அந்த தடுப்பூசிகளை கொடுத்து பரிசோதிக்கப்படுகிறது. இதுவரை, அந்த தடுப்பூசிகள் பாதுகாப்பானவை மற்றும் பயனளிக்கக் கூடியவை என்பது தான் உறுதிப்படுத்தப்பட்ட தகவலாக இருக்கிறது.
எல்லோருக்கும் தடுப்பூசி
இதுதவிர, பயோன்டெக் மற்றும் ஃபிசர் மற்றும் சினோபார்ம் மற்றும் சினோவா பயோடெக் ஆகிய இரு சீன நிறுவனங்களும் 3வது கட்ட மனித பரிசோதனையில் ஈடுபட்டுள்ளன. இந்த நிலையில்தான், இந்த நிறுவனங்கள் தயாரித்துள்ள தடுப்பூசிகளை உலகில் உள்ள பல கோடி மக்களுக்கு செலுத்த தொடங்கினால் என்ன, என்ற கேள்வி எழுந்துள்ளது.
இந்திய நிறுவனம் அபாரம்
இன்னும் சொல்லப்போனால் உலகத்தின், மிகப்பெரிய தடுப்பூசி தயாரிப்பு நிறுவனமான இந்தியாவில் உள்ள செரம் இன்ஸ்டியூட் இப்போது ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் தடுப்பூசியை கோடிக்கணக்கான டோஸ்கள் தயாரிக்க ஆரம்பித்து விட்டது. இன்னமும் முழுமையாக முடிவுகள் தெரியாத நிலையில், உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் அளிக்காத நிலையிலும் கூட, தைரியமாக பல கோடி ரூபாயை செலவிட்டு ஆக்ஸ்போர்டு பலகலைக் கழகத்துடன் ஒப்பந்தம் செய்து, இந்த தடுப்பூசிகளை தயாரிக்கத் தொடங்கி விட்டது, என்று சுட்டிக் காட்டியுள்ளார், போர்ப்ஸ் பத்திரிக்கையின் மருத்துவ நிபுணர் குழு எழுத்தாளர் ஸ்டீவன் சல்ஸ்பெர்க்.
தைரியம்
மூன்றாவது கட்ட பரிசோதனையும், சக்சஸ், என்ற தகவல் வந்து விட்டால், இந்தியாவில் உள்ள பெரும்பாலான மக்களுக்கு உடனடியாக தடுப்பூசி வழங்குவதற்கு இது உதவும். ஒரு வேளை, மூன்றாவது கட்ட பரிசோதனையில் இந்த ஊசி மருந்து பக்க விளைவு கொண்டது என்றோ, அல்லது கொரோனாவை குணப்படுத்துவதில் சிரமம் இருப்பதாக தெரியவந்தாலோ, இதில் செய்யப்பட்டுள்ள கோடிக்கணக்கான முதலீடு வீணாகி விடும். எனவேதான் உலகின் பல்வேறு மருந்து கம்பெனிகளும் இப்போதே மருந்து தயாரிப்பை ஆரம்பிக்கவில்லை. ஆனால் நமது நாட்டு நிறுவனம் தைரியமாக செய்துள்ளது.
உலக நாடுகள்
இதை பார்த்ததும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளிலும் இப்போது பெரிய அளவில் தடுப்பூசிகளை தயாரிக்கும் பணிகளை துவக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்துள்ளன. அதிகப்படியான பணம் தேவைப்படுவதால் தனியார் இதில் ஈடுபட அச்சம் தெரிவிக்கின்றனர். எனவே அந்தந்த நாட்டு அரசுகள் தடுப்பூசி தயாரிப்புக்கு நிதி ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கைகள் அங்கு வலுக்கின்றன. பிரிட்டன் மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள், ஏற்கனவே ஆய்வுப் பணிகளுக்கு நிதி ஒதுக்கி உள்ளனர்.
அச்சம் தேவையில்லை
எனவே பிற நாடுகளும் இந்த மருந்து நிறுவனங்களுடன் வணிக ஒப்பந்தங்களை மேற்கொண்டு இப்போதிருந்தே தடுப்பூசிகளை தயாரிக்க வேண்டும் என்பது சுகாதார வல்லுனர்கள் கருத்தாக உள்ளது. ஒருவேளை இந்த தடுப்பூசி தோல்வி அடைந்துவிட்டால் செய்த முதலீடு வீணாகிவிடுமே என்ற அச்சம் தேவையில்லை என்கிறார்கள் வல்லுனர்கள். ஏனெனில், இரண்டு கட்ட பரிசோதனைகள் வெற்றிகரமாக முடிந்துவிட்ட நிலையில் தற்போது பல ஆயிரம் பேருக்கு ஊசிகள் போடப்பட்டு, அதுவும் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை என்பது தெரிந்து விட்டது. எனவே தைரியமாக இப்போது இந்த மருந்துகளை உற்பத்தி செய்ய தொடங்கலாம் என்பது மருத்துவ வல்லுனர்களின் கருத்தாக இருக்கிறது.
ஏற்கனவே வெற்றிதான்
ஒருவேளை இந்த மருந்தால் பக்கவிளைவுகள் ஏதும் ஏற்பட்டிருந்தால், 30,000 பேருக்கு எப்படி இந்த தடுப்பூசி போட முடியும்? அவ்வாறு போட்டிருந்தால் அது மருத்துவ நெறிமுறைகளுக்கு எதிரானது என்று அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். 30,000 பேருக்கு ஒரு தடுப்பு ஊசியை தைரியமாக போடும்போது, உலகிலுள்ள அனைவருக்கும் அதை போடுவதில் எந்த சிக்கலும் கிடையாது. ஒருவேளை மருந்து போதிய அளவு பலன் கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை. பலருக்கு அது பலன் கொடுத்துள்ளது ஏற்கனவே ஆய்வுகளில் தெரிய வந்துள்ளதால், ஒரு சிலருக்கு பலனளிக்காவிட்டாலும் பிரச்சினை இல்லை. பெரும்பாலானோருக்கு பலனளிப்பதால், கொரோனா வைரஸ் பரவும் வேகம் கிடுகிடுவென குறைந்துவிடும் என்று அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள்.
ஆயுதம் உள்ளதே
ஒரு பக்கம் பக்கவிளைவுகள் இல்லை என்பது தெரிந்துவிட்டது, மற்றொரு பக்கம் தடுப்பூசியின் வீரியம் எப்படிப்பட்டது என்பது ஓரளவுக்கு தெரிந்து விட்டது. எனவே, எந்த ஆயுதமும் இன்றி இந்த யுத்தத்தில் போரிடுவதை காட்டிலும், இருக்கின்ற ஆயுதத்தை உடனே பயன்படுத்தி போரிடுவது சேதத்தை குறைக்க உதவும். கொரோனா வைரஸ் காரணமாக தினமும் உலகம் முழுக்க லட்சக்கணக்கான மக்கள் உயிரிழக்கிறார்கள். கொரோனா தடுப்பூசியை பொதுமக்களிடம் பயன்படுத்தப்படுவதற்கு காலதாமதமாக கூடிய ஒவ்வொரு நாளும், பல உயிர்கள் போகின்றன. அதை ஒப்பிடும்போது தடுப்பூசி போட்டு ரிஸ்க் எடுப்பது பெரிய விஷயம் கிடையாது, என்ற கருத்துக்கள் அதிகரிக்கின்றன,
விரைவில் தடுப்பூசி
உலகம் முழுக்க அதிகரித்துவரும் இந்த கருத்துக்களை பார்த்தால், வைரசுக்கு எதிரான தடுப்பூசி, மிக விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என்று எதிர்பார்க்கலாம். யார் யாருக்கு விருப்பமோ அவர்கள் தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம், கட்டாயம் கிடையாது என்ற அறிவிப்புடன் இந்தியாவிலும் இந்த தடுப்பூசி அமலுக்கு வரும் என்று தெரிகிறது. எவ்வளவு விரைவில் இதை உலக நாடுகள் செய்கின்றனவா, அவ்வளவு விரைவில் உலகம் இந்தப் பெரிய தொற்று நோயிலிருந்து விடுதலை பெறும்.