அமெரிக்க வெளியுறவு அமைச்சராகிறார் சூசன் ரைஸ்.. ஜோ பிடன் செம மூவ்.. பின்னணியில் ஓபாமா!
வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் பராக் ஒபாமா தனது முன்னாள் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சூசன் ரைஸை வெளியுறவு அமைச்சராக நியமிக்க ஜோ பிடனுக்கு அழுத்தம் கொடுக்கிறார் என்று பிடனுக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சராக யார் பதவி ஏற்கிறார்கள் என்பது உலக நாடுகள் அனைத்தாலும், உற்று நோக்கப்படும் முக்கியமான ஒரு விஷயம் ஆகும்.
அதிபர் பதவியில் யார் இருக்கிறார்களோ அவர்களுக்கு அடுத்தபடியாக சர்வதேச நாடுகள் உன்னிப்பாக கவனிக்க கூடிய பதவி இதுவாகும்.
யார் வெளியுறவுத் துறை அமைச்சர்
இந்தியாவும் ஜோ பிடன் நிர்வாகத்தில் யார் அமெரிக்காவின் வெளியுறவுத்துறை அமைச்சராக பதவியேற்க உள்ளார் என்று ஆவலோடு பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், பாக்ஸ் நியூஸ் என்ற அமெரிக்காவின் முன்னணி ஊடகம் இது தொடர்பாக ஒரு செய்தியை வெளியிட்டுள்ளது. அதில் ஜனநாயக கட்சியை சேர்ந்த பராக் ஒபாமா ஆட்சி காலத்தில் தேசிய பாதுகாப்பு ஆலோசகராக பதவிவகித்த சூசன் ரைஸ், ஜோ பிடன் ஆட்சி காலத்தில், வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட வேண்டும் என்று ஒபாமா அழுத்தம் கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கமலா ஹாரீஸ்
2008ஆம் ஆண்டு ஒபாமா ஆட்சிக்காலத்தின் போது ஐக்கிய நாடுகள் சபையின் அமெரிக்க தூதராக நியமிக்கப்பட்டவர் சூசன் ரைஸ். பிறகு 2013 ஆம் ஆண்டு அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்ற அந்தஸ்துக்கு உயர்த்தினார் ஒபாமா. கமலா ஹாரிஸை துணை அதிபராக இறுதி செய்யப்படும் முன்பு சூசன் ரைஸ் பெயர்தான் அந்த பதவிக்கு அடிபட்டுக் கொண்டிருந்தது என்பது இதில் கவனிக்கத்தக்கதாகும்.
ஒபாமா ஆட்சி காலம்
2012ஆம் ஆண்டு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் பதவி காலத்திற்கு பிறகு அந்த பதவி இடத்திற்கு சூசன் ரைஸ் நியமிக்கப்படுவார் என்று பேச்சுக்கள் அடிபட்டன. ஆனால், 2012ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி, லிபியாவில் அமெரிக்க தூதரகம் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் சம்பவத்தை ஒபாமா நிர்வாகம் சிறப்பாக கையாண்டதாக தொலைக்காட்சிகளில் கருத்து தெரிவித்து வந்தார் சூசன் ரைஸ். இதன் காரணமாக எழுந்த எதிர்ப்பின் காரணமாக அவர் அப்போது வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட வில்லை. எனவே தற்போது அவரை வெளியுறவுத்துறை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்று ஒபாமா ஆசைப்படுவதாக கூறப்படுகிறது. லிபியாவின் பென்காஸியில் உள்ள தூதரகத்தில் அன்சார் அல்-ஷரியா என்ற தீவிரவாத அமைப்பினர் நடத்திய அந்த தாக்குதலில், லிபியாவுக்கான அமெரிக்க தூதர் கிறிஸ்டோபர் ஸ்டீவன்ஸ் உட்பட 3 அமெரிக்கர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு முன்பு, முன்னெச்சரிக்கையாக, அமெரிக்க தூதரகத்தில் பாதுகாப்பை பலப்படுத்துவதில் ஓபாமா அரசு தோல்வியடைந்ததாக குடியரசு கட்சி குற்றம்சாட்டியிருந்தது.
அனுபவம் உள்ளவர்
பில் கிளிண்டன் பதவிக் காலத்தின்போது சூசன் ரைஸ், அதிபருக்கான சிறப்பு உதவியாளராகவும் ஆப்பிரிக்க விவகாரங்களுக்கான மூத்த இயக்குனராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. சூசன் ரைஸ் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கராகும்.