வெடிகுண்டு பார்சல்களை ஒபாமா, ஹிலாரிக்கு அனுப்பியவர் இவரா?.. கைதானது எப்படி?- பரபர தகவல்கள்
வாஷிங்டன்: அமெரிக்காவில் முன்னாள் அதிபர் ஒபாமா, ஹிலாரி கிளிண்டன் உள்ளிட்டோருக்கு வெடிகுண்டு பார்சல் அனுப்பிய நபர் கைது செய்யப்பட்டது எப்படி என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும் அவர் டிரம்ப் கட்சி உறுப்பினர் என்றும் தெரியவந்தது.
அமெரிக்காவில் நாடாளுமன்றத் தேர்தல் அடுத்த மாதம் 6-ஆம் தேதி நடக்கிறது. இதற்காக அதிபர் டிரம்ப், முன்னாள் அதிபர் ஓபாமா, முன்னாள் வெளியுறவு துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் ஆகியோர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதில் டிரம்பை ஓபாமா, ஹிலாரி கிளிண்டன், ஜோ பிடன், நடிகர் ராபர்ட் டி நீரோ, இந்திய வம்சாவளி பெண் எம்பி கமலா ஹாரிஸ் ஆகியோர் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் அவர்களுக்கு தபாலில் வெடிகுண்டு பார்சல்கள் அனுப்பப்பட்டதால் பெரும் சர்ச்சை எழுந்தது.
[டிரம்ப், ஒபாமா, கிளிண்டன், சிறிசேனா.. முக்கிய தலைவர்களுக்கு கொலை மிரட்டல்.. என்ன நடக்கிறது?]
விசாரணை
எனினும் அவை சம்பந்தப்பட்டவர்களுக்கு போய் சேருவதற்கு முன்பே அமெரிக்க ரகசிய போலீஸ் படையினர் அதை தடுத்து நிறுத்தி அந்த வெடிகுண்டுகளை செயலிழக்க வைத்தனர். இதையடுத்து இந்த குண்டுகளை அனுப்பியது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வந்தனர்.
பரபர தகவல்கள்
இதையடுத்து இந்த பார்சல்களை அனுப்பியவர் புளோரிடா மாகாணத்தை சேர்ந்த சீசர் சயோக் (56) என கண்டறிந்தனர். இதையடுத்து அவரை நேற்று முன் தினம் கைது செய்தனர். இவர் சிக்கியது எப்படி என்பது குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.
கைது
வெடிகுண்டு பார்சல்களில் சீசரின் கைரேகை இருப்பது கண்டறியப்பட்டது. இதை வைத்து சீசரை கைது செய்தனர். மேலும் டிஎன்ஏ பரிசோதனை, செல்போன் தகவல்கள் உதவியதாகவும் கூறப்படுகிறது. சீசர் புளோரிடா மாகாணத்தில் வசித்து வருகிறார். இவர் கடந்த 2002-ஆம் ஆண்டும் வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக கைது செய்யப்பட்டார்.
பார்சல் அனுப்பியது யார்
இவர் டிரம்பின் குடியரசு கட்சியின் உறுப்பினர். கடந்த 2016, 2017 ஆகிய ஆண்டுகளில் டிரம்ப் பங்கேற்ற பொதுக் கூட்டங்களில் கலந்து கொண்டார். ஒபாமா உள்ளிட்டோர் டிரம்பை விமர்சனம் செய்தது பிடிக்காமல் இவர் இதுபோல் வெடிகுண்டு பார்சல் அனுப்பியது தெரியவந்தது.