சிரியாவில் பதுங்கியிருந்த பாக்தாதியின் உள்ளாடையை திருடிய உளவாளி!
வாஷிங்டன்: அமெரிக்கா நடத்திய ஆபரேஷனுக்கு முன்னர் சிரியாவில் பதுங்கியிருப்பது ஐஎஸ்ஐஎஸ் தலைவர் அபு பக்கர் அல் பாக்தாதிதான் என்பதை உறுதிப்படுத்த மரபணு சோதனை மேற்கொள்ள அவரது உள்ளாடையை சிரிய படையினர் திருடி சென்றனர்.
மிகவும் கொடூரமான தீவிரவாத அமைப்பான ஐஎஸ்ஐஎஸ்ஸின் தலைவராக இருந்த அபு பக்கர் அல் பாக்தாதியை அமெரிக்க ராணுவம் கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் தேடி வந்தது. இவர் ஈராக் மற்றும் சிரியாவில் உள்ள சில பகுதிகளை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தார்.
இந்த நிலையில் அவர் சிரியாவில் இட்லிப் என்ற இடத்தில் பாக்தாதி பதுங்கியிருப்பதாக அமெரிக்க ராணுவத்துக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அந்த இடத்தை படைகள் சுற்றி வளைத்தது.
விடாமல் துரத்திய படை
பின்னர் பாக்தாதியின் உதவியாளர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து தனது 3 குழந்தைகளுடன் அந்த கட்டடத்தில் இருந்த குகைக்குள் பாக்தாதி ஓடினார். அப்போதும் அமெரிக்க படைகள் அவரை விடாமல் துரத்தின.
தற்கொலை
இதையடுத்து தம்மால் தப்ப முடியாது என கருதிய பாக்தாதி உடலில் கட்டியிருந்த வெடிகுண்டை வெடிக்கச் செய்து பலியானார். இவரது இறப்பை அமெரிக்க அதிபர் டிரம்ப் உறுதிப்படுத்தினார். இந்த ஆபரேஷனுக்கு குர்திஷ் தலைமையிலான ஜனநாயகப் படைகளும் உதவி புரிந்தன.
அமெரிக்க படைகள்
இந்த நிலையில் இதுகுறித்து சிரிய ஜனநாயக படைகளின் மூத்த ஆலோசகர் போலோட் கேன் தனது டுவிட்டர் பக்கத்தில் விவரித்துள்ளார். அவர் கூறுகையில் கடந்த மே 15ஆம் தேதி முதல் பாக்தாதியை பிடிக்க அமெரிக்க படைகளுடன் பணியாற்றி வருகிறோம்.
பாக்தாதி
அல் பாக்தாதி அவ்வப்போது அவரது இருப்பிடத்தை மாற்றிக் கொண்டே இருந்தார். இதனால் அவருடன் இருந்த எங்கள் உளவாளி அவரின் உள்ளாடையை திருடி வந்தார். இதை வைத்து டிஎன்ஏ ஆய்வு செய்து அந்த கட்டடத்தில் பதுங்கியிருந்தது பாக்தாதி தானா என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார்.
ஆபரேஷன் வெற்றி
எங்களது உளவு துறை பாக்தாதி இருக்கும் இடத்தில் வான் வழியாக குண்டு எறிவது முதல் கடைசி நேரம் வரை அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் தெரிவித்து வந்ததும் இந்த ஆபரேஷன் வெற்றி அடைய ஒரு காரணமாகும் என தெரிவித்துள்ளார்.