அமெரிக்கா - சவுதி உறவு...மறுபரிசீலனை செய்ய அதிபர் பைடன்முடிவு... இளவரசருக்கு நெருக்கடி?
வாஷிங்டன்: அமெரிக்கா - சவுதி அரேபியா உறவில் மற்றொரு விரிசலாக அந்நாட்டுடனான உறவை அதிபர் பைடன் மறுபரிசீலனை செய்ய முடிவு எடுத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் புதிய அதிபராக கடந்த ஜனவரி மாதம் பதவியேற்ற ஜோ பைடன், அப்போது முதலேயே பல அதிரடி அறிவிப்புகளை மேற்கொண்டு வருகிறார். குறிப்பாக, வெளியுறவுக் கொள்கைகள் குறித்த பைடனின் அறிவிப்புகளை உலக நாடுகள் மிகவும் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.
அதன்படி சில வாரங்களுக்கு முன், வெளியுறவு கொள்கை குறித்த தனது முதல் உரையில் ஏமன் நாட்டி அமெரிக்கா அளித்து வந்த ஆதரவை வாபஸ் வாங்குவதாக அறிவித்தார். இந்தப் போருக்குப் பின்னால், சவுதி இருப்பது அனைவருக்கும் தெரிந்ததே! சவுதி உடனான உறவில் விழுந்த முதல் விரிசலாக இது பார்க்கப்படுகிறது.
மறுபரிசீலனை
இந்தச் சூழ்நிலையில், இன்று செய்தியாளர்களிடம் பேசிய வெள்ளை மாளிகையின் ஊடகப் பிரிவு செயலாளர் ஜென் சாகி, "சவுதி அரேபியாவுடனான எங்கள் உறவை மறுபரிசீலனை செய்ய உள்ளோம். அதன்படி இனி அமெரிக்க அதிபர் தனது உரையாடல்களைச் சவுதி மன்னர் சல்மான் உடனேயே நிகழ்த்துவார்" என்று தெரிவித்தார். இது சவுதி அரசுக்கு, குறிப்பாக அந்நாட்டின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுக்கு வைக்கப்பட்ட செக் எனப் பலரும் கருதுகின்றனர்.
இளவரசருக்கு செக்
85 வயதாகும் சவுதி மன்னர் சல்மானுக்கு தற்போது உடல்நிலை சரி இல்லை. இதனால் ஒட்டுமொத்தமாக நாட்டின் நிர்வாகம் தற்போது முகமது பின் சல்மானிடமே உள்ளது. இந்தச் சூழ்நிலையில் அமெரிக்காவின் இந்த அறிவிப்பால் சவுதி அரசு அதிருப்தி அடைந்துள்ளது. இளவரசர் பின் சல்மான் தற்போது சவுதி அரசின் துணைப் பிரதமராகவும் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் உள்ளார். இதனால் இனி அமெரிக்காவின் பாதுகாப்புத் துறை செயலர் லாயிட் ஆஸ்டின் உடன் மட்டுமே இளவரசரால் அதிகாரப்பூர்வமாக தொடர்பு கொள்ள முடியும்,
டிரம்ப் - சவுதி உறவு
டிரம்ப் காலத்தில் சவுதி உடன் மிகவும் நெருக்கமான உறவை அமெரிக்கா கொண்டிருந்தது. டிரம்ப்பும் இளவரசர் பின் சல்மானுடன் நெருங்கிய தொடர்பிலிருந்தார். இதன் காரணமாகவே கடந்த 2018ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் துருக்கியிலுள்ள சவுதி தூதரகத்தில் அமெரிக்கச் செய்தியாளர் ஜமால் காஷோகி கொல்லப்பட்ட போது கூட, அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. மேலும் மத்திய கிழக்கு நாடுகளின் முக்கிய நாடாகச் சவுதியை டிரம்ப் கருதினார்.
பைடன் விருப்பம்
அமெரிக்காவின் இந்த நிலைப்பாடு பைடன் பதவியேற்ற சில நாட்களிலேயே மாறியது. சவுதி அரசுடன் மேற்கொள்ளப்பட்டு வந்த ஆயுத விற்பனையை நிறுத்தி கொள்வதாக பைடன் அறிவித்திருந்தார். இதன் மூலம் ஏமன் போரை விரைவில் முடிவுக்குக் கொண்டு வர முடியும் என்று பைடன் கருதுகிறார். மேலும், ஏமன் உள்ளிட்ட பல விஷயங்களில் பின் சல்மான் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது பைடனின் விருப்பமான உள்ளது.
தற்போதைய நிலை
ஆனால். இதற்காக அமெரிக்கா மற்றும் சவுதி உறவு முற்றிலுமாக முடிவுந்துவிட்டதாக கூற முடியாது. மேலும், ஈரான் அரசின் அடக்குமுறைகளைச் சமாளிக்கச் சவுதிக்கு என்றும் அமெரிக்கா துணை நிற்கும் என்றும் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, அமெரிக்காவின் இந்த முடிவு இரு நாடுகளுக்கும் இடையே பிளவு அல்ல என்று தெரிவித்துள்ள அமெரிக்க அரசியல் வல்லுநர்கள், டிரம்ப் காலத்தில் சவுதிக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டதாகவும் இரு நாடுகளுக்கும் இடையே தற்போதுதான் முறையான உறவு ஏற்படுத்தப்படுவதாகவும் தெரிவித்துள்ளனர்.