30 ஆண்டுகள் இல்லாத கடும் குளிர்.. அப்படியே உறைந்துப் போன டெக்சாஸ்.. 1 வாரமாக கரெண்ட், குடிநீர் இல்லை
வாஷிங்டன்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வரலாறு காணாத கடும் குளிர் வாட்டி வருகிறது. பெரும் பனிக்கட்டிகள் சாலை முழுக்க சூழ்ந்து கிடக்கின்றன. பல இடங்களில் ஒரு வாரமாக மின் இணைப்பு, குடிநீர் சப்ளை இல்லாமல் மக்கள் அவதிபடுகிறார்கள்.
பொதுவாக டெக்சாஸ் மாகாணம் அதிகமாக கடும் குளிர் பதிவாக கூடிய பிராந்தியம் கிடையாது. ஆனால் இந்த வருடம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு மிக மோசமான அளவிற்கு குறைந்த பட்ச வெப்பநிலை அங்கு பதிவாகியுள்ளது.
இந்த வாரத்தில் அங்கு குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் 18 டிகிரி செல்சியஸ் வரை இறங்கி போனதால் மக்கள் குளிர் காரணமாக உறைந்து போயுள்ளனர்.
சாலையெங்கும் பனிக் கட்டி
சாலைகள், வீடுகளின் மீது எனக்கும் பனிக் கட்டிகளாக காணப்படுகின்றன. கடந்த ஒரு வாரமாகவே மின் இணைப்பு இல்லாமல் மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். வெள்ளிக்கிழமை நிலவரப்படி டெக்சாஸ் மாகாணத்தில் ஒரு லட்சத்து 80 ஆயிரம் வீடுகள் மற்றும் வணிக நிறுவனங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு இருந்தது.
மின் இணைப்பு, குடிநீர் இல்லை
சுமார் 30 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் மின் இணைப்பு இல்லாமல் மின் துண்டிப்பு காரணமாக பாதிக்கப்பட்டிருப்பதாக டெக்சாஸ் மாகாண நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது. டெக்சாஸ் மாகாணத்தின் மொத்த மக்கள் தொகையில் பாதி அளவுக்கு அதாவது 13 மில்லியன் என்ற அளவுக்கு மக்களுக்கு குடிநீர் கிடைக்கவில்லை. உறைபனி காரணமாக குடிநீர் வழங்கல் ஸ்தம்பித்துப் போயுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தின் தலைநகரம் ஆஸ்டின் நகரில் சுமார் 1.2 பில்லியன் லிட்டர் தண்ணீர் குடிநீர் குழாய் உடைப்பு காரணமாக வீணாக போய் உள்ளது.
டெக்சாஸ் பேரிடர்
நிலைமை இவ்வளவு மோசமாக இருக்கும் நிலையில்தான் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெக்சாஸ் மாகாணம் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியிட உள்ளார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இவ்வாறு அறிவிப்பதன் மூலமாக கூடுதலாக நிதி ஒதுக்கி நிவாரண பணிகளை மேற்கொள்ள முடியும் என்கிறார்கள் அரசு வட்டாரத்தில்.
டெக்சாஸ் கடும் குளிர்
டெக்சாஸ் மாகாணத்தில் நேரடியாக சென்று ஆய்வு பணிகளை மேற்கொள்ள உள்ளதாக அதிபர் ஜோ பிடன் தெரிவித்துள்ளார். ஆனால் இப்போது செல்வது மீட்பு பணிகளுக்கு சிக்கலை ஏற்படுத்தும். தன்னால் அங்குள்ள அதிகாரிகளுக்கு கூடுதல் பணிச் சுமை ஏற்படும் என்று அவர் கருத்து கூறியுள்ளார். அமெரிக்க முழுக்கவே இந்த கடுமையான குளிர் காரணமாக 60 பேர் வரை உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.