அமெரிக்க வரலாற்றில்.. அதிபர்கள் மீதான கொலை முயற்சிகளும்.. கொலைகளும்.. உச்சகட்ட பாதுகாப்பு பின்னணி..!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபருக்கு உச்சக்கட்ட பாதுகாப்பு வழங்கப்படுவதன் பின்னணியில் அந்நாட்டின் 150 ஆண்டு கால அரசியல் வரலாறு அடங்கியுள்ளது.
அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் இன்னும் 5 நாட்களில் நடைபெறவுள்ள நிலையில் இதற்கு முன் அதிபர்களாக இருந்தவர்கள் மீது நிகழ்த்தப்பட்ட கொலைகள் மற்றும் கொலை முயற்சி தாக்குதல் பற்றி அறிய வேண்டியது அவசியம்.
150 ஆண்டுகால அமெரிக்க வரலாற்றில் 4 அதிபர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதுடன் 15 அதிபர்கள் மீது கொலை முயற்சிகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
அமெரிக்க அதிபராக இருந்த ஆபிரகாம் லிங்கனை 1865-ல் ஜான் வில்கின்ஸ் பூத் என்ற வெள்ளை இன வெறியர் சுட்டுக்கொலை செய்தார். கருப்பின மக்கள் அடிமைகளாக நடத்தப்பட்டதற்கு எதிராக அவர் மேற்கொண்ட உறுதியான நடவடிக்கைகள் காரணமாக வெள்ளை இன வெறியர்களின் கோபத்திற்கு ஆளாகியிருந்தார் ஆபிரகாம் லிங்கன்.
அவரைத் தொடர்ந்து அடுத்த 16 ஆண்டுகளில், அதாவது 1881-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ஜேம்ஸ் கார்பீல்டை மனநிலை பாதிக்கப்பட்ட இளைஞர் ஒருவர் சுட்டுக்கொலை செய்தார். இதையடுத்து 1901-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த வில்லியம் மெக்கின்லியை லியான் காஸ்க்லாஸ் என்ற நபர் சுட்டுக்கொன்றார்.
இந்த 3 கொலைகளுக்கு பின்னர் அமெரிக்க அதிபர்களுக்கான பாதுகாப்புகள் தீவிரப்படுத்தப்பட்டன. ஆனாலும் அமெரிக்க அதிபர்கள் மீதான கொலை முயற்சிகள் தொடர்ந்த வண்ணம் இருந்தன.
இதனிடையே 1901-ம் ஆண்டுக்கு பிறகு 62 ஆண்டுகள் கழித்து, அதாவது 1963-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ஜான் எஃப் கென்னடியை லீ ஹார்வி ஆஸ்வால்ட் என்ற அமெரிக்க ராணுவ முன்னாள் வீரர் சுட்டுக்கொன்றார். ஜான் எஃப் கென்னடியின் மரணம் உலகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
மிகவும் இளவயதில் அமெரிக்க அதிபராக பதவியேற்றவர் ஜான் எஃப் கென்னடி. தற்போது எப்படி ஒபாமா, டிரம்ப் புகழ் பெற்று திகழ்கிறார்களோ அதே போல் அன்றைய காலக்கட்டத்தில் புகழின் உச்சியில் இருந்தவர் கென்னடி. திறந்த காரில் நின்றவாறு சென்ற போது இவர் கொலை செய்யப்பட்டார்.
இப்படியாக அமெரிக்க அதிபர்கள் 4 பேர் இதுவரை கொலை செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் 1975-ம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த ஜெரால்ட் போர்டை சாரா ஜேன் மூர் என்ற பெண் கொலை செய்ய முயற்சித்தார். 1981-ம் ஆண்டு ரொனால்டு ரீகனை மனநிலை பாதிக்கப்பட்ட நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்றார்.
அமெரிக்க அதிபர் தேர்தல்.. மனைவி ஜில்லுடன்.. கூலாக வந்து ஓட்டுப் போட்ட ஜோ பிடன்
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அதிர்ஷ்டவசமாக உடலை துளைத்த குண்டுகள் வெளியே எடுக்கப்பட்டதால் தன் மீதான கொலை முயற்சிக்கு பிறகும் 8 ஆண்டுகள் அமெரிக்க அதிபராக பதவியில் நீடித்தார் ரீகன். இப்படி 15 அமெரிக்க அதிபர்கள் மீது கொலை முயற்சிகள் நடைபெற்றிருக்கின்றன.
இதன் விளைவாக தான் இன்று காற்று கூட அனுமதியின்றி புகாத வண்ணம் அமெரிக்க அதிபருக்கு பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. கடந்தகாலங்களில் கவனக்குறைவால் ஏற்பட்ட அசம்பாவிதங்களை கருத்தில் கொண்டு உலகின் உச்சபட்ச பாதுகாப்பு வளையம் அமெரிக்க அதிபருக்கு உருவாக்கப்பட்டுள்ளது.