அவர்கள் எல்லாம் பயங்கரவாதிகள், தண்டிக்கப்பட வேண்டியவர்கள்... நாடாளுமன்ற தாக்குதல் குறித்து ஜோ பைடன்
வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தைத் தாக்கியவர்கள் உள்நாட்டுப் பயங்கரவாதிகள் என்றும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்றும் அதிபராகப் பதவியேற்கவுள்ள ஜோ பைடன் கூறியுள்ளார்.
ஜோ பைடனை அமெரிக்க அதிபராகத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வின்போது, டிரம்ப் ஆதரவாளர்கள் திடீரென்று நாடாளுமன்ற கட்டடத்தில் புகுந்தனர். அப்போது ஏற்பட்ட வன்முறையில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட இத்தாக்குதலுக்குப் பலரும் கண்டங்களைத் தெரிவித்து வருகின்றனர். மேலும், இத்தாக்குதலுக்குப் பொறுப்பேற்று டிரம்ப் பதவி விலக வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.
ஏற்றுக்கொள்ள முடியாது
இத்தாக்குதல் குறித்து அடுத்து அமெரிக்க அதிபராகப் பதவியேற்கும் ஜோ பைடன் கூறுகையில், "அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் ஏற்பட்ட வன்முறைகள் ஏற்றுக்கொள்ள முடியாது. நாடாளுமன்ற கட்டடத்தைப் பாதுகாக்கும் பணியில் ஏற்பட்ட இந்தத் தோல்விகளுக்குச் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்பேற்க வேண்டும். மீண்டும் இது போன்ற ஒரு சம்பவம் ஒரு போதும் நடக்காது என்பதை நாம் உறுதிப்படுத்த வேண்டும்" என்றார்.
உள்நாட்டு பயங்கரவாதிகள்
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து பைடன் கூறுகையில், "அவர்கள் குண்டர்கள், வெள்ளை இனவாதிகள், யூத எதிர்ப்பு அமைப்புகளைச் சேர்ந்தவர்கள். இது மட்டுமில்லை நாடாளுமன்ற கட்டடத்தில் வன்முறையில் ஈடுபட்ட அனைவரும் உள்நாட்டுப் பயங்கரவாதிகள். வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குத் தொடரப்பட்டு விசாரணை நடத்தப்பட வேண்டும். அவர்களுக்கு என்ன மாதிரியான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்பது குறித்து நமது நீதித்துறை முடிவு செய்யும்" என்று தெரிவித்தார்.
குடியரசு கட்சிதான் காரணம்
இந்த வன்முறை தொடர்பாக டெட் க்ரூஸ் உள்ளிட்ட பல குடியரசு கட்சி எம்பிகளையும் அவர் கண்டித்தார். அதிபர் தேர்தல் குறித்து சில குடியரசு கட்சி எம்பிகள் தொடர்ந்து பொய்யான தகவல்களைப் பரப்பியதே இந்த வன்முறைக்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்தார். நாடாளுமன்ற கட்டடத்தில் வன்முறையில் ஈடுபட்டவர்களுடன் அங்கிருந்த காவலர்கள் எடுத்துக்கொண்ட செல்பிகளும் இணையத்தில் வைரலானது. இது குறித்து உரிய முறையில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பைடன் கூறினார்.
முன்கூட்டியே பதவி நீக்கம்
அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் வரும் 20ஆம் தேதி பதவியேற்கவுள்ளார். இருப்பினும், முன்கூட்டியே அவரை பதவி நீக்குவது தொடர்பாகவும் அந்நாட்டு எம்பிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். அவரை பதவி நீக்கும் மசோதா வரும் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.