மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டி... சொந்தமாக ஒரு சமூக வலைத்தளம்... அதிரடி திட்டங்களுடன் டிரம்ப்
வாஷிங்டன்: தனக்கான ஆதரவு மக்களிடையே அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ள டிரம்ப், 2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு நடைபெற்ற அதிபர் தேர்தல் டிரம்ப் படுதோல்வி அடைந்தார். இதையடுத்து, பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் நிகழ்வு நடைபெற்றபோது, கடந்த ஜனவரி 6ஆம் தேதி நடைபெற்ற அமெரிக்க நாடாளுமன்ற வன்முறை வெடித்தது. இதற்கு டிரம்ப் தான் காரணம் என்றும் ஜனநாயகக் கட்சியின் குற்றஞ்சாட்டினர். இது தொடர்பாக அவர் மீது கண்டன தீர்மானமும் கொண்டு வரப்பட்டது.
இருப்பினும், குடியரசு கட்சியினரின் ஆதரவால் அந்தத் தீர்மானத்திலிருந்து டிரம்ப் தப்பினார். இதையடுத்து, வரும் 2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிடுவார் என்று அவரது ஆதரவாளர்கள் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டு வருகின்றனர்.
சமீபத்தில் செய்தி நிறுவனம் ஒன்று டிரம்ப் அளித்திருந்த பேட்டியில், "மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிடுவது குறித்து இப்போதே கருத்துச் சொல்ல முடியாது. ஆனால் எனக்கு மக்களிடையே மிகப் பெரிய ஆதரவு உள்ளது. அமெரிக்க வரலாற்றிலேயே கண்டன தீர்மானத்திற்குப் பின்னரும் மக்களின் ஆதரவு அதிகமான ஒரு நபர் நான் மட்டுமே" என்றார்.
அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசிகளை விரைவாகவும் சரியாகவும் விநியோகிக்க டிரம்ப் நிர்வாகம் முறையான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அதிபர் பைடன் குற்றஞ்சாட்டியிருந்தார். இதற்குப் பதிலளித்த டிரம்ப், "பைடன் உண்மையைச் சொல்ல மறுக்கிறார். அல்லது வேண்டுமென்ற அவர் பொய் கூறுகிறார்" என்று கூறினார்.
ஜனவரி 6ஆம் தேதி நாடாளுமன்ற வன்முறைக்குப் பின், ட்விட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்கள் டிரம்பை நிரந்தரமாகத் தடை செய்தன. அடுத்தகட்டமாக எந்த சமூக வலைத்தளத்தைப் பயன்படுத்த முடிவு செய்துள்ளீர்கள் என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், "இது குறித்து பலருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். என்ன நடக்கிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.. எனக்கு என சொந்தமாக ஒரு இணையதளத்தை உருவாக்குவது குறித்தும் சிந்தித்து வருகிறோம்" என்றார்.