அமெரிக்க கலவரம்... பின்னணியில் டிரம்ப்.... வெளியான முக்கிய ஆதாரம்
வாஷிங்டன்: டிரம்பின் தேர்தல் பிரச்சாரங்களில் முக்கிய ஸ்பான்சராக இருந்த பப்ளிக்ஸ் சூப்பர் மார்க்கெட்டு நிறுவனம் அமெரிக்க நாடாளுமன்ற போராட்டத்திற்கும் நிதியுதவி அளித்துள்ளதாக முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்தாண்டு நவம்பர் 3ஆம் தேதி நடைபெற்றது. இதில் டிரம்பை ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார். கடந்த 26 ஆண்டுகளில் பதவியிலுள்ள அதிபர் தேர்தலில் தோற்பது இதுவே முதல்முறையாகும்.
இருப்பினும், ஜோ பைடனின் வெற்றியைச் செல்லாது என்று அறிவிக்க டிரம்ப் பல்வேறு முயற்சிகளை எடுத்தார். நீதிமன்றம் முதல் தேர்தல் அலுவலர்களை மிரட்டுவது வரை பல வழிகளிலும் அவர் முயன்றார். இருப்பினும், எதிலும் அவருக்குப் பலன் கிடைக்கவில்லை.
அமெரிக்க கலவரம்
இறுதி முயற்சியாக ஜோ பைடன், கமலா ஹாரிஸ் வெற்றி பெறும் நிகழ்ச்சியை அங்கீகரிக்கும் நிகழ்வு நடைபெறும் நாளில் நாடாளுமன்ற கட்டடத்தின் முன் போராட்டத்திற்கு டிரம்ப் அழைப்பு விடுத்திருந்தார். அப்போது திடீரென்று டிரம்ப் ஆதரவாளர்கள் அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்திற்குள் புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இதில் காவலர்கள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.
டிரம்ப் ஸ்பான்சர்
இந்த வன்முறைக்குப் பின்னணியில் டிரம்ப் உள்ளார் எனப் பலரும் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தனர். இந்நிலையில், 2020ஆம் ஆண்டில் அதிபர் தேர்தலுக்கு டிரம்பின் முக்கிய ஸ்பான்சராக இருந்த பப்ளிக்ஸ் சூப்பர் மார்க்கெட்டு என்ற நிறுவனம் அமெரிக்க நாடாளுமன்ற போராட்டத்திற்கு சுமார் 30 ஆயிரம் டாலர் நிதியுதவி அளித்தாக வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது.
பின்னணியில் டிரம்ப்
அதேபோல டிரம்பின் முக்கிய ஸ்பான்சரான ஜூலி ஜென்கின்ஸ் ஃபேன்செலி என்பவர் நாடாளுமன்ற கலவரத்திற்கு முன், டிரமப் கலந்து கொண்ட பேரணிக்கு சுமார் ஐந்து லட்சம் டாலர் நிதியுதவி அளித்தாகவும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் செய்தி வெளியிட்டுள்ளது. இந்தப் பேரணியில்தான் டிரம்ப், வன்முறையை தூண்டும் விதமாகப் பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து ஜூலி ஜென்கின்ஸ் ஃபேன்செலி தங்கள் நிறுவனத்தில் பணிபுரியவில்லை என்றும் அவருக்கும் தங்களும் தொடர்பு இல்லை என்றும் பப்ளிக்ஸ் சூப்பர் மார்க்கெட்டு விளக்கமளித்துள்ளது.
விசாரணை தீவிரம்
ஜனவரி 6ஆம் தேதி, அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்ற வன்முறை வரலாற்றில் கறுப்பு நாளாகப் பார்க்கப்படுகிறது. கலவரத்தின்போது சமூக வலைத்தளங்களில் பரவிய வீடியோ மற்றும் புகைப்படங்களை அடிப்படையாகக் கொண்டு தற்போது விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தக் கலவரம் தொடர்பாக இதுவரை சுமார் 135க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.