டிரம்பின் நேர்மையின்மையே... லட்சக்கணக்கான அமெரிக்கர்களை கொன்றது... பாயும் பவுசி
வாஷிங்டன்: டிரம்ப் நிர்வாகத்தின் நேர்மையின்மையே அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பை பல மடங்கு அதிகப்படுத்தியதாக அதிபர் பைடனின் சுகாதார துறை ஆலோசகர் ஆண்டனி பவுசி தெரிவித்துள்ளார்.
உலகிலேயே கொரோனா பரவல் காரணமாக மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்ட நாடாக அமெரிக்கா உள்ளது. அந்நாட்டில் இதுவரை 2.53 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 4.22 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
கொரோனாவைக் கட்டுப்படுத்த அந்நாட்டில் ஃபைசர் மற்றும் மாடர்னா தடுப்பூசிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. முதல்கட்டமாகச் சுகாதார ஊழியர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்றுவருகிறது.
டிரம்ப் நிர்வாகம்
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு இந்தளவு அதிகரித்ததற்கு டிரம்பின் நிர்வாக தோல்வியே காரணம் என்று குற்றஞ்சாட்டப்படுகிறது. கொரோனா பரவலுக்குச் சீனாவே காரணம் என்று அவர் தொடர்ந்து குற்றஞ்சாட்டிவந்தார். மேலும், கொரோனா பரவல் என்பது ஒரு சுகாதார பாதிப்பு இல்லை என்பதைப் போலவும் அது பொருளாதார பாதிப்பு என்றும் காட்டிக்கொள்ள முயன்றார். மாஸ்க் அணிவதற்கு எதிராகவும் அவ்வப்போது கருத்துகளைத் தெரிவித்து சர்ச்சையைக் கிளப்பினார்.
உயிரிழப்பு அதிகமாக டிரம்பே காரணம்
இந்நிலையில், அந்நாட்டின் தேசிய தொற்றுநோய் ஆய்வகத்தின் தலைவரும் அதிபர் பைடனின் சுகாதார ஆலோசகருமான ஆண்டனி பவுசி சிஎன்என் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்தார். அதில் அவர், "டிரம்ப் நிர்வாகத்தின் நேர்மையின்மையே அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்பை அதிகப்படுத்தியது. குறிப்பாக, வைரஸ் பரவலும் உயிரிழப்புகளும் அதிகமானபோது, மருத்துவ ரீதியாகவும் அறிவியல் ரீதியாகவும் நிரூபிக்கப்படாதவற்றை எல்லாம் அவர் கூறினார், அது நிலைமையை மேலும் மோசமாக்கியது" என்றார்.
நிலைமை மோசமானது
டிரம்ப் நிர்வாகம் தொடர்ந்து உண்மைக்கு மாறான தகவல்களைக் கூறிவந்ததே உயிரிழப்பை அதிகப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டார். மேலும், ஹைட்ராக்ஸி குளோரோகுயின் போன்றவை கொரோனா சிகிச்சைக்காகப் பரிந்துரைக்கப்பட்டபோது சங்கடமாக இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார். எவ்வித ஆதாரமுமின்றி இதுபோல எடுக்கப்படும் முடிவுகள் ஆபத்தானது என்றும் அப்போது அதிபராக இருந்த டிரம்பிற்கு முரணான கருத்துகளைக் கூறும்போது அங்கு சூழல் மகிழ்ச்சியாக இல்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
பைடன் அரசு
கோவிட் -19 பரவலை அமெரிக்க மக்களுடன் முற்றிலும் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் பைடன் அரசு கையாளும் என்றும் பவுசி தெரிவித்தார். மேலும், "ஏதாவது தவறாக நடந்தால், அதைச் சரி செய்ய வேண்டுமே தவிர ஒருவரை ஒருவர் மாறி மாறி குற்றஞ்சாட்டக்கூடாது. அதேபோல பைடன் நிர்வாகத்தில் எடுக்கப்படும் அனைத்து முடிவுகளும் அறிவியலை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும்" என்றார்.