8ம் தேதி இறுதி கெடு.. சிறு ஆதாரம் இருந்தாலும் போதும்.. டிரம்ப் போட்ட மாஸ்டர் பிளான்!
வாஷிங்டன்: தேர்தல் முறைகேடு பற்றி சிறு ஆதாரம் இருந்தாலும், அமெரிக்கா முழுவதும் வழக்கு போடுங்கள் என அரசு வக்கீல்களுக்கு டிரம்ப் அரசின் அட்டர்னி ஜெனரல் வில்லியம் பார், அதிரடி உத்தரவிட்டுள்ளார்.
பிடன் அதிபராக பதவி ஏற்க இன்னும் 70 நாட்கள் உள்ள நிலையில் அதற்குள் டிரம்ப் எப்படியாவது அதற்கு முட்டுக்கட்டை போட வேண்டும் என்று போராடி வருகிறார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 3ம் தேதி நடந்தது. இதில், ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடென் பெரும்பான்மைக்கு தேவையான 270க்கும் மேற்பட்ட எலக்டோரல் வாக்குகளை (290) பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஆளும் குடியரசு கட்சி வேட்பாளரும் அதிபருமான டிரம்ப் தோல்வியை தழுவினார்.
டிரம்ப் மறுப்பு
பிடன் வெற்றி பதவியேற்பதற்கான நடவடிக்கைகளை தொடங்கும் நிலையில், டிரம்ப் தனது தோல்வியை பகிரங்கமாக ஒப்புக் கொள்ள மறுத்து வருகிறார். தேர்தலிலும் வாக்கு எண்ணிக்கையிலும் பல முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றம்சாட்டி வருகிறார்.
வழக்கு தொடர உத்தரவு
வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி, தேர்தலையே செல்லாமல் ஆக்க டிரம்ப் முயன்று வருகிறார். இதன்படிதான் டிரம்ப் அரசின் அட்டர்னி ஜெனரலான வில்லியம் பார், அரசு வக்கீல்களுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதன்படி ‘ஒவ்வொரு மாகாணத்திலும், தேர்தல் முறைகேடு தொடர்பான சிறு ஆதாரம் கிடைத்தாலும் கூட அதை வைத்து வழக்கு தொடர வேண்டும்,' என கூறியுள்ளார். இந்த உத்தரவை தொடர்ந்து அரசு வக்கீல்கள் தேர்தல் முறைகேடு தொடர்பான ஆதாரங்களை சேகரித்து வருகின்றனர்.
8ம் தேதிக்கு மாற்றம்
இதனிடையே தபால் வாக்குகளை எண்ணி முடிக்க இம்மாதம் இறுதிவரை ஆகும் என்பதால் அதன்பிறகு தான் இறுதி முடிவு குறித்து தேர்தல் அதிகாரிகள் சான்றிதழ் வழங்குவார்கள். எனவே,அடுத்த மாதம் 8ம் தேதி வரை தேர்தல் பிரச்னை குறித்து வழக்கு தொடர முடியும். டிசம்பர் 14ம் தேதி எலக்ட்ரோல் குழுவினர் கூடி வாக்களித்து முறைப்படி அதிபரை தேர்வு செய்வார்கள்.
தபால் வாக்குகள் தாமதம்
அதற்குள் வழக்கு மேல் வழக்கு போட்டு, பிடனை பதவியேற்க விடாமல் செய்ய டிரம்ப் திட்டமிட்டு வருகிறார். இதனிடையே அதிபர் தேர்தல் நடந்த 3ம் தேதி இரவு 8 மணியுடன் வாக்கு பதிவு நேரம் முடிந்தாலும், அதன் பிறகும் 3 நாட்கள் கழித்தும் கூட வந்த தபால் ஓட்டுகள் ஏற்கப்பட்டதாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதில், காலம் தாழ்த்தி கொண்டு வரப்பட்ட தபால் ஓட்டுகளை மட்டும் தனியாக பிரிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இது தொடர்பாக 10 அட்டர்னி ஜெனரல்கள் அனுப்பிய ஆலோசனையில், ‘தாமதமாக வந்த வாக்குச்சீட்டுகளை ஏற்பது அரசியலமைப்பிற்கு எதிரானது. இதன் மூலம், நிறைய மோசடிகள் நடக்கும். எனவே, தாமதாக அனுப்பப்பட்ட வாக்குகளை எண்ண தடை விதிக்க வேண்டும்,' என வலியுறுத்தி உள்ளார்கள்
அமைச்சர் நீக்கம்
டிரம்ப் தரப்பு வழக்கு போட்டு அதிரடி காட்டி வரும் நிலையில், பிடன் தரப்போ பதவி ஏற்க ஆயத்தமாகி வருகிறது. தெளிவான தேர்தல் முடிவு வராமல் பதவியில் இருந்து டிரம்ப் விலகமாட்டார் என்றே அதிபர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் 70 நாட்கள் அதிபராக பதவி வகிக்க முடியும் என்பதால் தேர்தலில் தனக்கு சாதமாக பணியாற்றவதர்களை நீக்கும் பணியில் டிரம்ப் மும்முரமாக இறங்கி உள்ளார் திடீரென பாதுகாப்பு அமைச்சர் மார்க் எஸ்பரை அப்பதவியில் இருந்து நீக்கியிருக்கிறார். இன்னும் நிறைய பேரை தூக்க முடிவு செய்திருக்கிறாராம்.
வெற்றி தடுக்க சதி
தேர்தல் விவகாரத்தில் அமெரிக்க ஊடகங்கள் தனது வெற்றியை தடுக்க முயற்சித்துவிட்டாராக அவைகள் மீது டிரம்ப் கடும் கோபத்தில் உள்ளார். டிவிட்டரில் அவர், ‘பல மீடியாக்கள் நான் பின்தங்கியிருப்பதாக திரும்பத் திரும்ப கூறின.ஆனால், அந்த மாகாணங்களில் நான் தான் வென்றேன். பல செய்தி சேனல்கள் தவறாக செய்தியை வெளியிட்டன. அதைப் பற்றி விளக்க வேண்டும்,' என்று கூறியுள்ளார்.