அதிபர் தேர்தலில் டிரம்பால் மீண்டும் போட்டியிட முடியாது... முன்னாள் ஐநா தூதர் திட்டவட்டம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல்களில் இனி டிரம்பால் போட்டியிட முடியாது என்று ஐநாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதரும் டிரம்ப் ஆதரவாளருமான நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார்.
கடந்தாண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் தனக்கு ஏற்பட்ட தோல்வியை முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் கடைசி வரை ஒப்புக்கொள்ளவில்லை. தேர்தலில் மிகப் பெரியளவில் மோசடி நடைபெற்றதாகத் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்தார். அவரது ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை நம்பி, டிரம்ப் ஆதரவாளர்களும் தொடர் போராட்டங்களை நடத்தினர்.
அப்படிதான் கடந்த ஜனவரி 6ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் புகுந்து, டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இது தொடர்பாக அவர் மீதான கண்டன தீர்மானம் தற்போது நாடாளுமன்றத்தின் சென்ட் சபையில் விசாரணையில் உள்ளது.
போட்டியிடக் கூடாது
டிரம்ப் மீதான விசாரணை குறித்து ஐநாவுக்கான முன்னாள் அமெரிக்க தூதர் நிக்கி ஹேலி கூறுகையில், "அதிபர் தேர்தலுக்குப் பின் டிரம்பிற்கு என்ன ஆனது என்று தெரியவில்லை. அவரது செயல்பாடுகள் என்னை மிகவும் பாதித்துவிட்டது. அவர் மீண்டும் அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாது என்றே நினைக்கிறேன். அவர் இதிலிருந்து முற்றிலும் விலகிச் சென்றுவிட்டார்" என்றார்.
கட்சியை சீரழித்துவிட்டார்
அமெரிக்காவின் தெற்கு கரோலினா மாகாணத்தின் முன்னாள் ஆளுநர்தான் நிக்கி ஹேலி. இவர் கடந்த 2017-18 வரை ஐநாவுக்கான அமெரிக்க தூதராக இருந்தவர். தீவிர டிரம்ப் ஆதரவாளராக இருந்த இவர், கடந்த நாடாளுமன்ற கட்டட வன்முறைக்குப் பின், தொடர்ந்து டிரம்பிற்கு எதிராகவே கருத்து கூறி வருகிறார். மேலும், குடியரசு கட்சியினர் அனைவரும் டிரம்ப் எதிரான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்றும் அவர் குடியரசு கட்சியின் பெயரை சீரழித்து விட்டார் என்றும் நிக்கி ஹேலி கூறினார்.
அதிபர் தேர்தல்
தொடர்ந்து டிரம்பை கண்டித்துப் பேசிய அவர், "அவர் செய்யக் கூடாது பல விஷயங்களைச் செய்தார். எனவே, குடியரசு கட்சியினர் அவருக்குத் தொடர்ந்து ஆதரவு அளிக்கக் கூடாது. அவர் நம் அனைவரிடமும் தொடர்ந்து பொய் கூறிவந்தார். நாம் அவரை இப்போது காப்பாற்றிவிட்டால், மீண்டும் அவர் இதையேதான் செய்வார்" என்றார். மேலும், 2024ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் தான் போட்டியிடப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கண்டன தீர்மானம்
முன்னாள், அமெரிக்க அதிபர் டிரம்ப் மீதான கண்டன தீர்மானம் தற்போது அமெரிக்காவின் சென்ட் சபையில் விசாரணை நடைபெற்று வருகிறது. டிரம்பை தண்டிக்கக் குறைந்தபட்சம் 67 எம்பிகளின் ஆதரவு ஜனநாயகக் கட்சியினருக்குத் தேவை. ஆனால்., தற்போது வரை வெறும் ஐந்து எம்பிகள் மட்டுமே டிரம்ப் எதிராக வாக்களித்துள்ளனர். இதனால் அவருக்கு எதிரான இந்தக் கண்டன தீர்மானம் வெற்றி பெறுவது கடினம் என்றே அமெரிக்க அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.