சிரியாவில் வீழ்ந்தது ஐஎஸ்ஐஎஸ்.. அறிவித்தார் டொனால்ட் ட்ரம்ப்.. அமெரிக்க படைகள் வாபஸ்
வாஷிங்டன்: சிரியாவில் ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத இயக்கம் முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டதாக அறிவித்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். தனது நாட்டுப் படைகளை திரும்ப அழைத்துள்ளார் அவர்.
வடகிழக்கு சிரியாவில் பெரும்பாலான பகுதிகள் ஐஎஸ் ஐஎஸ் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருந்தது. அவர்களை ஒழிக்க சுமார் 2000 அமெரிக்க படையினர் குவிக்கப்பட்டிருந்தனர்.
இந்த நிலையில் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நேற்று டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிரான வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை தொடர்ந்து, நமது சிறப்புமிக்க இளம் படையை தாயகத்திற்கு திரும்ப அழைத்துக் கொள்ள நேரம் வந்துவிட்டது என்று தெரிவித்திருந்தார்.
After historic victories against ISIS, it’s time to bring our great young people home! pic.twitter.com/xoNjFzQFTp
— Donald J. Trump (@realDonaldTrump) December 19, 2018
சிரியாவின் சில இடங்களில் இன்னும் கூட ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக சண்டைகள் நடந்து வரும் நிலையில், முழுமையாக வெற்றி அடைந்து விட்டதாக ட்ரம்ப் அறிவித்துள்ளது எந்த அளவுக்கு சரி என்ற கேள்விகளும் எழுந்துள்ளன.
பிரிட்டன் அரசும் இதைத்தான் கூறியுள்ளது. அந்நாட்டு செய்தி தொடர்பாளர் ஒருவர் இதுதொடர்பாக அளித்துள்ள பேட்டியில், ஐஎஸ்ஐஎஸ் அமைப்பு இன்னமும்கூட ஆபத்தான அமைப்பாகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அவர்களுக்கு என்று பிரத்தியேகமாக எல்லைகள் இல்லை என்ற போதிலும் கூட ஆபத்து இன்னும் நீங்கவில்லை. எனவே ஐஎஸ்ஐஎஸ் அமைப்புக்கு எதிரான போரில் பங்கெடுத்த அமெரிக்கா உள்ளிட்ட தோழமை நாடுகளுடன் இது தொடர்பாக ஆலோசனை செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.
இதனிடையே, தாங்கள் அடுத்த கட்டத்துக்கு நகர்ந்து கொண்டிருப்பதாக அமெரிக்காவின் பாதுகாப்பு தலைமையகமான பென்டகன் தெரிவித்துள்ளது. ஆனால் அடுத்த கட்ட நகர்வு என்ன? என்பது பற்றி பென்டகன் தகவல் எதுவும் வெளியிடவில்லை