வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெறும் ட்ரம்ப்... என்ன மருந்து கொடுக்கிறார்கள்
கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ட்ரம்ப்பிற்கு தற்போது ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்பட்டுள்ளது.
வாஷிங்டன் : கொரோனா தொற்றுக்கு ஆளான அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவருக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது அதிபர் நலமாக இருப்பதாக வெள்ளை மாளிகை மருத்துவர் கூறியுள்ளார்.
கொரோனா பரவலை அலட்சியமாக நினைத்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். முக கவசம் அணிவதை கேலியாக பேசினார். பொது இடங்களில் முக கவசம் இன்றி வலம் வந்தார் ட்ரம்ப் விளைவு அவருக்கு இப்போது கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
நேற்று இரவு ட்ரம்ப் தனது ட்விட்டர் பக்கத்தில். நன்றாக இருக்கிறேன் என நினைக்கிறேன். அனைவருக்கும் நன்றி என்று தெரிவித்தார்.
டொனால்ட் ட்ரம்ப் உடல்நிலை.. அமெரிக்க அதிபர் தேர்தல் தள்ளிப்போகுமா? சட்டம் சொல்வது என்ன?
ரெம்டெசிவிர் மருந்து
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த ட்ரம்பிற்கு காய்ச்சல் அதிகரிக்கவே தற்போது வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். வைரஸ் தடுப்பு மருந்தான ரெம்டெசிவிரை ட்ரம்புக்கு கொடுக்கும்படி வெள்ளை மாளிகை மருத்துவர்கள் அறிவுறுத்தியதை தொடர்ந்து அவருக்கு ஒரு டோஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் நலம்
இது தொடர்பாக அதிபர் ட்ரம்பின் மருத்துவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், வால்டர் ரீட் மருத்துவமனை மற்றும் ஜான் ஹாப்கின்ஸ் மருத்துவமனை வல்லுநர்களிடம் ஆலோசித்தபிறகு அதிபர் ட்ரம்பை வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனைக்கு இடம் மாற்ற பரிந்துரைத்தேன். தற்போது அதிபர் நலமாக இருக்கிறார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.
என்னென்ன சிகிச்சை
வல்லுநர்களுடன் ஆலோசித்தபிறகு அதிபருக்கு ரெம்டெசிவிர் மருந்து கொடுக்க முடிவு செய்திருக்கிறோம். ஏற்கெனவே அவருக்கு முதல் டோஸ் கொடுக்கப்பட்டு தற்போது ஓய்வு எடுத்து வருகிறார். அவருக்கு தற்போது ஆக்சிஜன் சப்ளை உதவி தேவையில்லை என்று கூறியுள்ளார்.
வெள்ளை மாளிகை அறிவிப்பு
ட்ரம்புக்கு கொரோனா உறுதியான உடன் ரெஜெனெரான் நிறுவனம் தயாரித்த ஆன்டிபாடி ஊசி போடப்பட்டுள்ளது. மேலும், ஜிங்க், வைட்டமின் டி, ஃபெமொடிடின், மெலடோனின், ஆஸ்பிரின் போன்றவையும் ட்ரம்புக்கு கொடுக்கப்பட்டு வருவதாக வெள்ளை மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.