கொரோனா பலி எண்ணிக்கையில் சீனா உண்மையைதான் சொல்லுதுன்னு நமக்கு எப்படி தெரியும்? டிரம்ப் கேள்வி
வாஷிங்டன்: கொரோனாவால் இத்தனை பேர் உயிரிழந்துள்ளனர் என சீனா கூறுவது உண்மைதான் என்பது நமக்கு எப்படி தெரியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.
Recommended Video
சீனாவில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பரவிய கொரோனா வைரஸால் அங்கு 3,316 பேர் பலியாகிவிட்டதாக கூறப்படுகிறது. அது போல் 82,361 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சீனாவிலிருந்து பரவியதாக கூறப்படும் கொரோனா வைரஸ் மற்ற நாடுகளில் கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி, அமெரிக்காவில் பலி எண்ணிக்கை சீனாவைவிட அதிகரித்துள்ளது.
செய்தியாளர்கள் சந்திப்பு
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,15,003 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவால் பலியானோரின் எண்ணிக்கை 5,102 ஆக உயர்ந்துள்ளது. ஒரே நாளில் 1,049 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதுகுறித்து டொனால்ட் டிரம்பின் செய்தியாளர்கள் சந்திப்பில் செய்தியாளர்களில் ஒருவர் கேள்வி எழுப்பினார்.
சீனா
அப்போது டிரம்பிடம் சீனாவை விட அமெரிக்காவில் கொரோனா பலி எண்ணிக்கை அதிகமாக உள்ளதே என கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு டிரம்ப் பதிலளிக்கையில், பலி எண்ணிக்கையை சீனா சரியாகத்தான் சொல்கிறது என்பது எப்படி நமக்கு தெரியும்? அவர்களுடைய புள்ளி விவரங்கள் அவர்களுக்கு சாதகமாக இருக்கலாம் என தெரிவித்த டிரம்ப், சீன அதிபர் ஜீ ஜின்பிங்குடன் நல்லுறவே நீடிக்கிறது என தெரிவித்தார்.
நோய் தொற்று
அமெரிக்க உளவுத் துறையும் சீனாவில் ஏற்பட்ட நோய் தொற்றுகள் மற்றும் இறப்பு எண்ணிக்கை குறித்து அந்நாடு சர்வதேச நாடுகளுக்கு தவறான தகவலை அளித்திருக்கலாம் என கூறியுள்ளது. சீனாவை காட்டிலும் அமெரிக்காவில் கொரோனாவால் பலி எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்பது தவறான செய்தியாகும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
சீனா எண்ணிக்கை
அது போல் கோவிட் 19ஐ எதிர்த்து போராடுவதில் சீனா நம்பிக்கைக்குரிய நட்பு நாடு இல்லை என்றும் மனிதனிடமிருந்து மனிதருக்கு பரவிய இந்த நோய் குறித்து சீனா தொடர்ந்து பொய்யையே கூறியது. இந்த உயிர்கொல்லி வைரஸ் குறித்து முதலில் கண்டறிந்த மருத்துவரை மிரட்டி அமைதிப்படுத்தியது, செய்தியாளர்கள் உண்மைத் தகவல்களை கூறவிடாமல் தடுத்தது போன்றவற்றில் ஈடுபட்ட சீனா பலி எண்ணிக்கையிலும் தவறான தகவலையே அளித்திருக்கலாம் என வெள்ளை மாளிகை தகவல்கள் கூறுகின்றன.
சீன வைரஸ்
கடந்த சில நாட்களாக அமெரிக்கா, சீனா இடையே வார்த்தை போர் நடந்து வருகிறது. கொரோனாவை தங்கள் நாட்டில் தொற்றியது அமெரிக்க ராணுவம் என சீனா குற்றம்சாட்டியது. அதற்கு பதிலடியாக சீனாதான் வைரஸை பரப்பியது என கூறிய டிரம்ப் தனது அடுத்தடுத்து பேட்டிகளில் சீன வைரஸ் என்றே கொரோனாவை அழைத்தது குறிப்பிடத்தக்கது.