டிரம்பை அதிபர் பதவியிலிருந்து நீக்கும் தீர்மானம்.. அமெரிக்க நாடாளுமன்றத்தில் தொடங்கியது விவாதம்
வாஷிங்டன்: சட்டப்பிரிவு 25ஐ பயன்படுத்தி டிரம்பை அதிபர் பதவியிலிருந்து நீக்க பென்ஸ் மறுத்துள்ள நிலையில், டிரம்பை பதவி நீக்கும் தீர்மானம் மீதான விவாதம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்பை ஜனநாயக கட்சியின் ஜோ பைடன் தோற்கடித்தார். இருப்பினும், தனது தோல்வியை ஒப்புக்கொள்ளாத டிரம்ப், தேர்தலில் பெரியளவில் முறைகேடு நடந்துள்ளதாகத் தொடர்ந்து குற்றச்சாடுகளை முன் வைத்து வந்தார்.
மேலும், ஜோ பைடனின் வெற்றி செல்லாது என அறிவிக்க டிரம்ப் பல முயற்சிகளை எடுத்தார். இருந்தாலும், இவை எதிலும் டிரம்பிற்கு வெற்றி கிடைக்கவில்லை.
பேஸ்புக், ட்விட்டரை தொடர்ந்து... டிரம்புக்கு எதிராக திரும்பிய யூடியூப்... டிரம்ப் சேனல் முடக்கம்
அமெரிக்க நாடாளுமன்றத்தில் வன்முறை
குறிப்பாக, ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் நிகழ்விலும் குழப்பத்தை ஏற்படுத்த டிரம்ப் முயன்றார். அதில் ஏற்பட்ட வன்முறையில், ஒரு காவலர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். இச்சம்பவத்திற்குப் பொறுப்பேற்று டிரம்ப் பதவி விலக வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர். இருப்பினும், டிரம்ப் தான் பதவி விலகப் போவதில்லை என்றும் கடந்த வாரம் தான் செய்ததில் தவறில்லை என்றும் கூறியுள்ளார்.
அதிபர் மைக் பென்ஸ் மறுப்பு
இதையடுத்து டிரம்ப் மீது சட்டப்பிரிவு 25ஐ பயன்படுத்தி, அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று துணை அதிபர் மைக் பென்ஸை அந்நாட்டு எம்பிகள் வலியுறுத்தினர். இருப்பினும், மைக் பென்ஸ் அதற்கு மறுத்துவிட்டார். மேலும், தற்போதைய சூழ்நிலையில், டிரம்பை பதவி நீக்கம் செய்வது என்பது நாட்டின் நலனிற்குச் சரியாக இருக்காது என்றும் அவர் தெரிவித்தார்.
வாக்கெடுப்பு
முன்னதாக, அதிபர் டிரம்ப் மீது சட்டப்பிரிவு 25ஐ பயன்படுத்த வேண்டும் என்ற தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நேற்று கொண்டு வரப்பட்டது. இதில் சட்டப்பிரிவு 25ஐ பயன்படுத்த வேண்டும் என்பதற்கு ஆதரவாக 223 எம்பிகளும் எதிராக 205 எம்பிகளும் வாக்களித்தனர். இருப்பினும், துணை அதிபர் பென்ஸ் சட்டப்பிரிவு 25ஐ பயன்படுத்த மறுத்துவிட்டார். இதையடுத்து அவரை பதவி நீக்கம் செய்யும் தீர்மானம் தற்போது கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த தீர்மானம் விவாதம் தற்போது தொடங்கி நடைபெற்று வருகிறது.
மேல் சபையில் நிறைவேறுமா
100 உறுப்பினர்களைக் கொண்ட அமெரிக்க மேல் சபை, தற்போது குடியரசு கட்சியின் கட்டுப்பாட்டிலேயே உள்ளது. டிரம்பை அதிபர் பதவியிலிருந்து நீக்கக் குடியரசு கட்சியைச் சேர்ந்த ஐந்து எம்பிகள் தற்போது ஆதரவளித்துள்ளனர். இருப்பினும், இந்த தீர்மானம் நிறைவேற்ற 75 உறுப்பினர்களின் தேவை. அதாவது குறைந்தபட்சம் குடியரசு கட்சியைச் சேர்ந்த 17 எம்பிகள் இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும்.
தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்க திட்டம்
மேலும், வரும் காலங்களில் டிரம்பை அதிபர் தேர்தலில் போட்டியிடுவதைத் தடுக்கும் வகையிலான தீர்மானத்தைத் தாக்கல் செய்ய அமெரிக்க எம்பிகள் திட்டமிட்டு வருகின்றனர். இதற்கு 51 உறுப்பினர்களின் ஆதரவு மட்டும் இருந்தால் போதும் என்பதால் இந்த தீர்மானம் எளிதில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த தீர்மானம் தாக்கல் செய்வதற்கான சட்ட ஆலோசனையில் தற்போது ஜனநாயகக் கட்சியினர் ஈடுபட்டுள்ளனர். முன்னதாக, 2024ஆம் ஆண்டு தேர்தலில் போட்டியிடவுள்ளதாக டிரம்ப் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.