டிரம்ப் பதவி நீக்க தீர்மானம்,பிப். 9 முதல் விசாரணை.. அதிபர் தேர்தலில் போட்டியிட தடை விதிக்க திட்டம்
வாஷிங்டன்: டிரம்ப் மீதான பதவி நீக்கத் தீர்மானம் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி முதல் அமெரிக்க நாடாளுமன்றத்தில் விசாரணை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் டிரம்பை ஜோ பைடன் தோற்கடித்தார். இருப்பினும், டிரம்ப் தனது தோல்வியைக் கடைசி வரை ஒப்புக்கொள்ளவில்லை. தேர்தலில் மிகப் பெரியளவில் மோசடி நடைபெற்றதாகத் தொடர்ந்து குற்றஞ்சாட்டிவந்தார்.
தேர்தலில் முடிவுகளை மாற்றவும் டிரம்ப் பல்வேறு முயற்சிகளையும் எடுத்தார். முதலில் நீதிமன்றங்களில் இது தொடர்பாக வழக்குகளைத் தொடர்ந்தார். அதில் அவருக்குச் சாதகமான முடிவுகள் கிடைக்கவில்லை. பின் ஒரு கட்டத்தில் வாக்குகளை மாற்றுமாறு தேர்தல் அலுவலர்களையும் வலியுறுத்தத் தொடங்கினார்.
அமெரிக்கக் கலவரம்
இந்தச் சூழ்நிலையில், கடந்த ஜனவரி 6ஆம் தேதி ஜோ பைடன் வெற்றியை அங்கீகரிக்கும் நிகழ்வு அமெரிக்க நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, திடீரென்று உள்ளே புகுந்த டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். அதில் இரு காவலர்கள் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர். 200 ஆண்டுக்கால அமெரிக்க ஜனநாயக வரலாற்றில் கறுப்பு நாளாக இது பார்க்கப்படுகிறது.
பதவி நீக்கத் தீர்மானம்
டிரம்பின் தூண்டுதலாலேயே இந்த வன்முறை நடைபெற்றதாகப் பலரும் குற்றஞ்சாட்டினர். மேலும், டிரம்ப் மீது பதவி நீக்கத் தீர்மானமும் கடந்த ஜனவரி 13ஆம் தேதி பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. அப்போதே விரைவில், இத்தீர்மானம் அந்நாட்டின் மேல் சபையிலும் எடுத்துக்கொள்ளப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், டிரம்ப் தனது வழக்கறிஞர்களை ஏற்பாடு செய்யத் தாமதமானது. மேலும், புதிய அதிபர் பைடனும் இந்த விஷயத்தில் ஆர்வம் காட்டவில்லை. இதனால் மேல் சபை டிரம்ப் பதவி நீக்கத் தீர்மானத்தை எடுத்துக்கொள்வதில் காலதாமதம் ஏற்பட்டது.
ஜனநாயகக் கட்சியினர் உறுதி
மேலும், இடைப்பட்ட காலத்தில் கடந்த ஜனவரி 20ஆம் தேதி அமெரிக்க அதிபராக ஜோ பைடன் பதவியேற்றார். இதனால் டிரம்ப் மீதான பதவிநீக்க தீர்மானம் மேல் சபையில் விசாரணை செய்யப்படாமலேயே போகலாம் என்று தகவல் பரவியது. இருப்பினும், மேல் சபை சபாநாயகர் நான்சி பெலோசி உள்ளிட்ட சில ஜனநாயக கட்சியினர் இந்தத் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதில் மிகவும் உறுதியாக உள்ளனர்.
பைடனுக்கு முன்னுரிமை
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சுமார் 2 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள கொரோனா நிவாரண தொகை வழங்கும் திட்டத்தை அதிபர் ஜோ பைடன் விரைவில் அறிவிக்கவுள்ளார். முதலில் இதை நிறைவேற்ற வேண்டும் என்பதிலேயே பெரும்பாலான ஜனநாயக கட்சி எம்பிகள் உறுதியாக உள்ளனர். பைடனின் திட்டங்களை நிறைவேற்றுவதே தங்கள் நோக்கம் என்றும் மற்ற விஷயங்களுக்கு தற்போது முன்னுரிமை அளிக்கத் தேவையில்லை என்றும் ஜனநாயகக் கட்சியினர் தெரிவித்தனர்.
போட்டியிடத் தடை
இருந்தாலும், டிரம்ப் மீது பதவி நீக்கத் தீர்மானத்தை நிறைவேற்றி, இனி வரும் காலங்களில் அவர் தேர்தலில் போட்டியிடவே தடை விதிக்க வேண்டும் என்பதிலும் ஜனநாயகக் கட்சியில் ஒரு பிரிவினர் உறுதியாக உள்ளனர். டிரம்ப் மீண்டும் அதிபரானால் நாட்டை மேலும் பிளவுபடுத்துவார் என்பது அவர்களின் வாதம். இந்நிலையில் டிரம்ப் மீதான பதவி நீக்கத் தீர்மானம் வரும் பிப்ரவரி 9ஆம் தேதி அந்நாட்டின் மேல் சபையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.