பிப்ரவரியில் டிரம்பை மீண்டும் சந்திக்கிறார் வடகொரிய அதிபர் கிம் ஜங்!
வாஷிங்டன்: பிப்ரவரி மாதம் இறுதியில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும், வடகொரிய அதிபர் கிம் ஜங்கும் சந்திக்கவுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறி தொடர்ந்து அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை சோதனை நடத்தி வந்ததால் வடகொரியா சர்வதேச நாடுகளின் எதிர்ப்பை சந்தித்தது. அமெரிக்கா அந்நாட்டின் மீது கடுமையான பொருளாதார தடைகளை விதித்தது.
அதோடு அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மற்றும் வடகொரிய தலைவர் கிம் ஜங் அன் இடையே டுவிட்டரிலும் பேட்டியிலும் கடுமையான சொற்களை பேசி வந்தனர். இதற்கிடையில் தென்கொரியாவில் நடந்த குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் வடகொரியா பங்கேற்றதை தொடர்ந்து, வடகொரியாவின் நடவடிக்கைகளில் பெரிய அளவில் மாற்றம் நிகழ தொடங்கியது.
அதன் தொடர்ச்சியாக எதிர் எதிர் துருவங்களாக விளங்கி வந்த டிரம்ப், கிம் ஜங் சந்தித்து பேசுவதற்கான சூழல் உருவானது. அதன்படி கடந்த ஆண்டு ஜூன் 12-ஆம் தேதி சிங்கப்பூரில் உச்சி மாநாடு நடத்தி இருவரும் சந்தித்து பேசினர்.
உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சந்திப்பின் போது இரு நாட்டு தலைவர்களிடையே ஒப்பந்தம் கையெழுத்தானது. அதோடு, கொரிய தீபகற்ப பகுதியை அணு ஆயுதங்கள் அற்ற பகுதியாக ஆக்குவதற்கு ஏற்ற விதத்தில் வடகொரியா செயல்படும் என கிம் ஜங் அன் உறுதிமொழி அளித்தார். அதன்படி தங்கள் நாட்டில் உள்ள அணு ஆயுத சோதனை கூடங்கள் மற்றும் ஏவுகணை தளங்களை வடகொரியா மூடியது.
எனினும் வடகொரியா மீது விதித்துள்ள கடுமையான பொருளாதார தடைகளை அமெரிக்கா விலக்கி கொள்ளாததால், எந்த நேரத்திலும் அணு ஆயுத கொள்கைக்கு திரும்பி விடுவோம் என வடகொரியா எச்சரித்து வருகிறது. இந்த நிலையில், டொனால்டு டிரம்ப்- கிம் ஜாங் அன் இடையேயான சந்திப்பு பிப்ரவரி மாத இறுதியில் நடைபெறும் என்று வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.