அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடுவேன்.. வெல்வேன்.. சொல்கிறார் டிரம்ப்
வாஷிங்டன்: அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார் டிரம்ப். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வரும் 18-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் நான்காண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும். கடந்த 2016 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் அமெரிக்க முன்னாள் அதிபர் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டனும், டிரம்பும் மோதினார்கள். இதில் ட்ரம்ப் வெற்றி பெற்றார்.
இறுதிவரை வெற்றி பெறுவார் என்று கணிக்கப்பட்ட ஹிலாரி தோல்வியை தழுவினார். ஆனால் அவரது வெற்றியை ஏற்றுக்கொள்ளாத அமெரிக்கர்கள் அவருக்கு எதிராக பேரணிகளை நடத்தினர். அதோடு அப்போது நடைபெற்ற தேர்தலில் ரஷ்யாவின் தலையீடு இருந்ததாகவும் புகார் எழுந்தது.
குவிந்த புகார்கள்
இந்த புகார் தொடர்பாக அதிபர் ட்ரம்ப்பை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என எதிர்கட்சியான ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் பலர் வலியுறுத்தி வருகின்றனர். இந்த நிலையில் 72 வயதாகும் அவர் அதிபராக தேர்வானது முதலே மீண்டும் போட்டியிடுவேன் என்றே கூறிவருகிறார்.
நானே மீண்டும் அதிபர்
சமீபமாக தனது ஆதரவாளர்களுடன் உரையாடும்போது தனது எஞ்சியுள்ள 6 ஆண்டு கால ஆட்சியில் என்றுதான் குறிப்பிட்டு பேசி வருகிறார். அதாவது அவரது இந்த ஆட்சி முடிய இன்னும் 18 மாதங்களே உள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறிவருகிறார்.
ஆர்லண்டோவில் அறிவிப்பு
அடுத்த தேர்தலில் தான் மீண்டும் போட்டியிடுவது குறித்து ட்விட்டரில் கருத்து பதிவிட்டுள்ள ட்ரம்ப், " நான் இரண்டாவது முறையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதை ஆர்லண்டோவில் ஜூன் 18-ந்தேதி அறிவிக்கிறேன். இந்த வரலாற்றுச்சிறப்புமிக்க கூட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ளுங்கள்" என அழைப்பு விடுத்துள்ளார்.
மனைவியுடன் வருகிறார்
கடந்த 2016 ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ட்ரம்ப்பின் வெற்றிக்கு புளோரிடா மாநிலம் மிக முக்கியப் பங்கு வகித்தது. இப்போது இந்த மாநிலத்தில் உள்ள ஆர்லாண்டோ நகரில் வரும் 18 ம் தேதி ஆளும்கட்சி சார்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவுள்ளது. இந்தப் பொதுக்கூட்டத்தில் டிரம்ப், தனது மனைவி மெலனியாவுடன் கலந்து கொள்ள உள்ளார்.
போட்டி குறித்த அறிவிப்பு
இதில் தான் மீண்டும் 2020 ல் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடுவது குறித்து அதிகாரப் பூர்வ அறிவிப்பை வெளியிடவுள்ளார். வரலாற்றுச் சிறப்பு மிக்க அந்தக் கூட்டத்துக்கு அனைவரும் வர வேண்டும் என்றும் தனது டிவிட்டரில் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். இதன்மூலம் அடுத்த தேர்தலிலும் ட்ரம்ப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
யார் எதிர்த்துப் போட்டி
ஆனால் டிரம்ப் போட்டியிட்டால் அவருக்கு எதிராக மிக வலுவான வேட்பாளரை நிறுத்த வேண்டிய நிலைக்கு ஜனநாயகக் கட்சி தள்ளப்படும். மேலும் டிரம்ப்பை வர விடாமல் தடுக்க அனைத்துத் தரப்பிலும் களம் இறங்குவார்கள் என்பது உறுதி. காரணம், இதுவரை இருந்த அமெரிக்க அதிபர்களிலியே அதிக வெறுப்புக்குள்ளானவர், சர்ச்சைகளில் சிக்கியவர், கேலி கிண்டல்களுக்குள்ளானவர் டிரம்ப் மட்டுமே.