வடகொரியா அதிபருடன் மீண்டும் சந்திப்பு... அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு
வாஷிங்டன்: வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன்னை இரண்டாவது முறையாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
இந்த சந்திப்பு வியட்நாமில் வரும் பிப்ரவரி 27 மற்றும் 28ம் தேதி நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னை அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த முறை சிங்கப்பூரில் சந்தித்து பேசினார். அப்போது அணு ஆயுத பரிசோதனைகளை கைவிடுவது பற்றி இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
2 வது முறை பேச்சுவார்த்தை
இரண்டாவது முறையாக இப்போது வியட்நாமில் பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதால், வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வுகள் அங்கு நடைபெற வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக வாஷிங்டனில் நடந்த அமெரிக்க கூட்டுக் குழு கூட்டத்தில் பேசிய டிரம்ப், வடகொரியாவில் அணு ஆயுத பரிசோதனைகள் தற்போது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த 15 மாதங்களாக அணு ஆயுத பரிசோதனைகள் நடைபெறவில்லை.
பலமான உறவு
ஒருவேளை இப்போது நான் அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றால், நிச்சயம் வடகொரியாவுடன் நாம் பெரிய போரை எதிர்கொண்டிருப்போம். அந்த அளவுக்கு வேலைகள் நடந்திருக்கும். ஆனால் நல்ல வேளையாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உடனான எனது உறவு நன்றாக உள்ளதால் அவ்வாறு நடக்கவில்லை. வடகொரிய அதிபர் கிம் ஜாங்
உன்னை வரும் பிப்ரவரி 27 மற்றும் 28 ஆகிய நாட்களில் வியட்நாமில் மீண்டும் சந்தித்து பேச உள்ளேன்.
சுவர் எழுப்புவோம்
சட்டவிரோத குடியேற்றம், கொடூர தாக்குதல்கள், போதைப் பொருள் விற்பனை ஆள் கடத்தல்கள் ஆகியவற்றை அமெரிக்காவில் முடிவுக்கு கொண்டு வந்துள்ளதை உலகிற்கு காட்ட வேண்டிய நேரம் வந்துவிட்டது. கடந்த காலங்களில், மெக்சிகோ எல்லையில் சுவர் எழுப்ப வேண்டும் என்ற முடிவுக்கு ஆதரவாக இந்த சபையில் பெரும்பாலானவர்கள் ஓட்டளித்தார்கள். ஆனால் இதுவரை முறையான சுவர் எழுப்பப்படவில்லை. நான் அதை கண்டிப்பாக கட்டுவேன். அதற்கான பல பணிகள் முடிக்கப்பட்டுள்ளது.
சீனாவின் திருட்டு தடுப்பு
முடிவில்லாமல் தொடரும் போர்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். அதற்காக ஆப்கானிஸ்தானில் எனது அரசு தாலிபன்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. பல ஆண்டுகளாக அமெரிக்க வேலைவாய்ப்புகள் மற்றும் வளங்களை குறிவைத்து சீனா நடத்தி வந்த திருட்டு, முடிவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதை இந்த நேரத்திலே நான் தெளிவுபடுத்திக் கொள்கிறேன் என்றும் டிரம்ப் கூறினார்.