அதிபர் பதவியிலிருந்து கிளம்பும் டிரம்ப்.. போகும் முன் பிரதமர் மோடிக்கு ஒரு விருது கொடுத்து அசத்தல்!
வாஷிங்டன்: அமெரிக்க அரசின் மிக உயரிய விருதுகளில் ஒன்றான ‛லிஜியன் ஆப் மெரிட்', பிரதமர் மோடிக்கு அதிபர் டிரம்ப் வழங்கினார்.
பல்வேறு துறைகளிலும் சிறந்த சாதனையைப் படைக்கும் நபர்களுக்கு நம் நாட்டில் ஆண்டுதோறும் பத்ம விருதுகள் வழங்கப்படும். இதேபோல சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளுக்கு இடையேயான உறவை மேம்படுத்தச் சிறப்பாக பணியாற்றும் உலக தலைவர்களுக்கு அமெரிக்கா ‛லிஜியன் ஆப் மெரிட்' என்ற விருதை அளிக்கிறது.
இதன்படி இந்தாண்டிற்கான ‛லிஜியன் ஆப் மெரிட்' விருதைப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் திங்கள்கிழமை வழங்கினார். இந்தியா அமெரிக்கா ஆகிய இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை மேம்படுத்தியதற்காகவும் இந்தியாவை குளோபல் சூப்பர் பவர் நாடாக உயர்த்தியதற்காகவும் பிரதமர் மோடிக்கு இந்த விருது அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விருதை, பிரதமர் மோடி சார்பில், அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்து அமெரிக்க தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் சி ஓ பிரையனிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
இது தொடர்பாக அமெரிக்கத் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் ராபர்ட் சி ஓ பிரையன், "அமெரிக்கா- இந்தியா இடையிலான உறவை மேம்படுத்தியதற்காகப் பிரதமர் நரேந்திர மோடிக்கு, ‛லிஜியன் ஆப் மெரிட்' என்ற உயரிய விருதை அதிபர் டிரம்ப் வழங்கினார்" என்றார்.
33 விவசாயிகள் மரணம்.. வாய் திறக்காத பிரதமர் மோடி.. காரணம் கேட்கும் காங்கிரஸ்!
அமெரிக்காவில் மிக உயரிய விருதுகளில் ஒன்றான 'லிஜியன் ஆப் மெரிட்', அமெரிக்க அதிபரால் மற்ற நாடுகளின் தலைவர்களுக்கு வழங்கப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடியைத் தவிர ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன், ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஜோ அபேவுக்கும் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.