இவ்வளவு பேசுகிறீர்களே 8 ஆண்டுகளாக என்ன செய்தீர்கள்... ஜோ பிடனுக்கு டிரம்ப் சரமாரி கேள்வி..!
வாஷிங்டன்: துணை அதிபராக இருந்த காலத்தில் அமெரிக்காவுக்கு ஜோ பிடன் என்ன செய்துள்ளார் என அதிபர் டிரம்ப் கேள்வி எழுப்பியுள்ளார்.
பதவியில் இருந்தபோது 8 ஆண்டுகளாக எதுவும் செய்யாமல் இப்போது வந்து அமெரிக்காவுக்கு நல்லது செய்வோம் என ஜோ பிடன் பேசி வருவதாக டிரம்ப் விமர்சித்துள்ளார். ஜோ பிடனுடன் நடைபெற்ற நேரடி விவாதத்தின் போது டிரம்ப் இதனைக் கூறினார்.
மேலும், ஜோ பிடனை பொறுத்தவரை மாற்றி மாற்றி பேசக்கூடியவர் என்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்து பணம் ஈட்டியவர் எனவும் டிரம்ப் குற்றஞ்சாட்டினார். தமது தந்தை ஒரு பணக்காரர் என்றும் தொழிலதிபராக நியாயமான முறையில் பணம் சம்பாதித்ததாகவும் தெரிவித்தார்.
வருமான வரி செலுத்திய கணக்கை விரைவில் தாம் வெளியிடுவேன் என உறுதியளித்த டிரம்ப் வருமான வரி விவகாரத்தில் திட்டமிட்டு தம் மீது அவதூறுகள் அள்ளிவீசப்படுவதாக வேதனைத் தெரிவித்தார். துணை அதிபராக இருந்த காலத்தில் ஜோ பிடன் மோசமான வழிமுறைகளில் பணம் சேர்த்தார் எனக் கூறியுள்ளார்.
ஆபிரகாம் லிங்கனுக்கு பிறகு கருப்பின மக்களுக்கு நல்லது செய்தது நான் மட்டுமே -டிரம்ப்
இதனிடையே டிரம்பின் குற்றச்சாட்டு உண்மைக்கு புறம்பானது எனக் கூறிய ஜோ பிடன் அமெரிக்காவின் முக்கிய பிரச்சனைகள் பற்றி டிரம்ப் பேச மறுப்பதாக சாடினார். அமெரிக்கர்களின் வருமானம் குறைந்ததற்கு காரணம் டிரம்பின் அலட்சியமான நிர்வாகமே காரணம் என ஜோ பிடன் குற்றஞ்சாட்டினார்.
டிரம்பை போல் ஒரு கட்சித் தலைவராக செயல்படாமல் பாகுபாடற்ற அதிபராக தாம் செயலாற்றுவேன் என்ற வாக்குறுதியை அளித்தார் ஜோ பிடன். தமது நடவடிக்கை காரணமாக தான் வடகொரியாவுடனான போர் தடுத்து நிறுத்தப்பட்டது என்றும் உலக நாடுகள் மத்தியில் நல்லுறவு பேணப்பட்டு வருவதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய ஜோ பிடன், மக்களுக்கு தாம் யார் என்றும், டிரம்ப் யார் என்றும் நன்கு தெரியும் எனக் கூறினார். அவர்கள் முடிவெடுத்துக்கொள்வார்கள் எனக் கூறினார். அமெரிக்காவின் குடியேற்றக் கொள்கை பற்றி ஜோ பிடனுக்கு எந்த புரிதலும் இல்லை என்றும் பிடன் சொல்வதை கேட்டு செயல்பட்டால், நாட்டிற்குள் மோசமானவர்கள் ஊடுருவி விடுவார்கள் என டிரம்ப் விவாதத்தின் போது சுட்டிக்காட்டினார்.