துருக்கியின் பொருளாதாரத்தை அழித்துவிடுவேன்... அமெரிக்க அதிபர் டிரம்ப் கடும் எச்சரிக்கை
வாஷிங்டன்: குர்தீஷ் படைகள் மீது தாக்குதலை நிறுத்தாவிட்டால் துருக்கியின் பொருளாதாரத்தை மிக விரைவில் அழித்துவிடுவோம் என அதிபர் டிரம்ப் கடுமையாக எச்சரித்துள்ளார்.
சிரியா நாட்டில் ஐஎஸ் தீவிரவாதிகளை அழிக்க அமெரிக்காவுக்கு உதவிய குர்தீஷ் படைகள் மீது துருக்கி தாக்குதல் நடத்திவருவதற்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. துருக்கி மீது பொருளாதார தடை விதித்துள்ள டிரம்ப, தாக்குதலை தொடர்ந்த அந்த நாட்டின் பொருளாதாரத்தை அழித்துவிடுவேன் எச்சரித்துள்ளார்.
சிரியாவிலும், ஈராக்கிலும் ஐஎஸ் தீவிரவாதிகள் கணிசமான இடங்களை 2014ம் ஆண்டு கைப்பற்றினர். இதையடுத்து குர்தீஷ் படையினரின் உதவியுடன் அமெரிக்கா ஐஎஸ் தீவிரவாதிகளை தோற்கடித்தது.
டிரம்ப் அறிவிப்பு
இந்நிலையில் வடக்கு சிரியாவில் அமெரிக்க படைகளை திருப்பி அழைப்பதாக டிரம்ப் அறிவித்தார். இதையடுத்து குர்தீஷ் படைகளை தாக்கி அந்த பகுதியை கைப்பற்ற துருக்கி முனைப்பு காட்டிவருகிறது.
துருக்கி மீது தடை
இதற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அமெரிக்கா, துருக்கியின் மீது பொருளாதார தடை விதித்துள்ளது. இது தொடர்பாக டிரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், வடக்கு சிரியாவில் ராணுவ நடவடிக்கையை துருக்கி மேற்கொண்டு வருவதற்கு எதிராக அந்த நாட்டின் அமைச்சரகங்கள் மற்றும் மூத்த அதிகாரிகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படுகிறது.
எச்சரிக்கை
சிரியாவின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை குலைக்கும் வகையில் அங்கு மனித உரிமை மீறலில் ஈடுபடுவோர், போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறுவோர். அகதிகள் தங்கள் சொந்த இடங்களுக்கு திரும்பி செல்வதை தடுப்போர் ஆகியோர் மீது கடும் தடைகளை விதிக்கும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என டிரம்ப் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
டிரம்ப் வலியுறுத்தல்
இதடையே அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ் கூறுகையில் அதிபர் டிரம்ப், துருக்கி அதிபர் எர்டோகனுடன் தொலைப்பேசியில் உரையாடியதுடன், வடக்கு சிரியாவில் போர் நிறுத்தத்தை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார் என்றார்.
டிரம்ப் எச்சரிக்கை
இதனிடையே சிரியாவில் துருக்கி தாக்குதல்களை தொடர்ந்தால் மிக விரைவில் அந்த நாட்டின் பொருளாதாரத்தை அழித்துவிடுவோம் என எச்சரித்துள்ளார்.