குழந்தைகளுக்கு வலுவான நோய் எதிர்ப்பு சக்தி உண்டு.. அவர்களுக்கு கொரோனா பரவாது.. டிரம்ப் தடாலடி
வாஷிங்டன்: என் பிள்ளையையும் எனது பேரன்களையும் பள்ளிக்கு அனுப்பத் தான் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
உலகிலேயே கொரோனா பாதிப்பு அதிகமுள்ள நாடுகளில் முதலிடத்தில் இருப்பது அமெரிக்கா. இங்கு 41 லட்சம் பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இங்கு பலியானோரின் எண்ணிக்கை 1.46 லட்சமானது.
19 லட்சம் பேர் கொரோனாவிலிருந்து குணமாகி வீடு திரும்பியுள்ளார்கள். எனினும் 20 லட்சம் பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். கொரோனா பரவலை கட்டுப்படுத்த தடுப்பு நடவடிக்கைகள் எடுக்க முடியாமல் அமெரிக்கா திணறி வருகிறது.
மக்கள் எக்கேடு கெட்டாலும் பரவாயில்லைனு விடுவதற்கு நான் டிரம்ப் இல்லை.. உத்தவ் தாக்கரே செம உதார்!
பொருளாதாரம்
எனினும் பொருளாதார நெருக்கடிகளை சமாளிப்பதற்காக டிரம்ப் அரசு தீவிரம் காட்டி வருகிறது. தொழிற்சாலைகள் செயல்பட அரசு அனுமதித்துள்ளது. இந்த நிலையில் பள்ளிகளை மீண்டும் திறக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் வெள்ளை மாளிகையில் அவர் செய்தியாளர்களையும் சந்தித்தார்.
பிள்ளைகள்
அப்போது அவரிடம் உங்கள் வீட்டுக் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவீர்களா என நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் நான் பள்ளிகள் திறப்பதையே விரும்புகிறேன், என் மகனும் பேர பிள்ளைகளும் பள்ளிக்கு செல்வதையே நான் விரும்புகிறேன் என தெரிவித்தார்.
நோய் எதிர்ப்பு சக்தி
மேலும் அவர் கூறுகையில் குழந்தைகளுக்கு வலுவான நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது. எனவே அவர்கள் எளிதாக நோய் தாக்குதலுக்கு ஆளாக மாட்டார்கள். பெற்றோர்களுக்கும் வீட்டில் உள்ள முதியவர்களுக்கும் நோயை கொண்டு செல்ல மாட்டார்கள். மேலும் பள்ளிகளை திறப்பது குறித்து அந்தந்த மாகாண ஆளுநர்கள் முடிவு எடுத்துக் கொள்ளலாம்.
மருத்துவ நிபுணர்கள்
அமெரிக்கர்கள் நல்ல சுகாதாரத்துடன் இருக்க வேண்டும். கைகளை அடிக்கடி கழுவுங்கள் என பலர் கூறுவதை நான் கேட்டுள்ளேன், எனவே நீங்கள் அனைவரும் கைகளை சுத்தமாக கழுவுங்கள் என்றார். ஏற்கெனவே விண்ணை முட்டும் அளவுக்கு கொரோனா பாதிப்பு சென்றுள்ள நிலையில் பள்ளிகளை திறந்தால் சின்னஞ்சிறிய குழந்தைகளுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.