ஒரு வழியாக வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற சம்மதித்து விட்டார் டிரம்ப்.. வைக்கும் நிபந்தனை!
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 270க்கும் அதிகமான தேர்தல் சபை வாக்குகளை ஜோ பிடன் பெற்றுள்ளார். இதுபற்றி, அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த இரு வாரங்களில் வெளியாக உள்ளது.. தேர்தல் சபை வாக்குகளை பிடன் பெற்றிருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்தால், நான் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவேன் என டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் தோல்வி அடைந்த திபர் டிரம்ப் இதுவரை தனது தோல்வியை ஏற்க மறுத்து வழக்கு மேல் வழக்கு போட்டு வருகிறார். தேர்தலில் பெரிய மோசடி நடந்து இருப்பதாக கூறும் டிரம்ப் அதற்கான ஆதாரங்களை இதுவரை வழங்கியதில்லை.
நவம்பர் மாதம் நடந்து முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில், எதிர்கட்சியான பிடன் தலைமையிலான ஜனநாயக கட்சி 306 உறுப்பினர்களை பெற்று தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. ஆனால் ஆளும் குடியரசு கட்சியோ 232 உறுப்பினர்களை மட்டுமே பெற்று உள்ளது. பல மாகாணங்களில் கடும் போட்டி நிலவியது மறுவாக்கு எண்ணிக்கையும் நடந்தது. ஆனால் எல்லா முடிவுகளும் பிடனுக்கே சாதகமாக இருந்தன.
பிடன் அதிக வாக்கு
வெற்றிக்குத் தேவையான 270 தேர்தல் சபை இடங்களை விட, பிடன் அதிகமாகவே உறுப்பினர்களை பெற்றுள்ளார். அத்துடன் பாப்புலர் வோட் எனப்படும் மக்கள் வாக்குகளும் டிரம்பை விட பிடனுக்கு சுமார் 6 மில்லியனுக்கும் அதிகமான வாக்குகள் கிடைத்துள்ளது.
வழக்குகள் தள்ளுபடி
ஆனால் இதை எதையுமே டிரம்ப் ஏற்க மறுத்து வருகிறார். டிரம்ப் மற்றும் அவரின் ஆதரவாளர்கள், அதிபர் தேர்தலுக்கு எதிராக, பெரிய மோசடி நடந்து உள்ளதாக கூறி ஏராளமன வழக்குகளைத் தொடர்ந்திருக்கிறார்கள். இதில் பெரும்பாலானவை தள்ளுபடி செய்யப்பட்டிருக்கின்றன.
டிரம்ப் சம்மதம்
வரும் டிசம்பர் 14ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.. அதன் பிறகு, அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க அதிபராக ஜோ பிடன் பதவி ஏற்பார். இந்நிலையில் இந்த வார தொடக்கத்தில், அதிகார பரிமாற்றத்துக்கு டொனால்ட் டிரம்ப் சம்மதித்துள்ளார்.
டிரம்ப் சம்மதம்
நேற்று முன்தினம் செய்தியாளர்களை சந்தித்து பேசிய டிரம்பிடம். நீங்கள் எலெக்டோரல் காலேஜ் வாக்குகளில் தோற்றால், வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறுவீர்களா என கேட்டார்க்ள. அதற்கு, அவர், "நிச்சயம் வெளியேறுவேன், அது உங்களுக்கே தெரியும். ஒருவேளை, அவர்கள் ஜோ பிடனை தேர்வு செய்து தவறிழைத்தால், நான் எப்போதும் தோல்வியை ஏற்காமல் போகலாம். ஏனெனில் அதை ஏற்றுக் கொள்வது என்பது மிகவும் கடினமானது, காரணம், இந்த தேர்தலில் மிகப் பெரிய மோசடி நடந்து இருப்பது நமக்குத் தெரியும்" என்றார்