அடி மேல் அடி.. எங்கு ட்வீட் போட்டாலும் கேட் போடும் ட்விட்டர்..புதிய தளத்தை உருவாக்க டிரம்ப் திட்டம்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக முடக்கப்பட்டதை அடுத்து ட்விட்டருக்கு மாற்றாக புதிய தளத்தை உருவாக்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜோ பிடனை காட்டிலும் குறைந்த எண்ணிக்கையிலான இடங்களை பிடித்து தோல்வி அடைந்தார்.
ஜனநாயக முறை படி நடந்த தேர்தலில் தோல்வி அடைந்த போதிலும் தான் பதவியை விட்டு விலகமாட்டேன் என அடம்பிடித்தவர் டிரம்ப். ஜோ பிடனின் வெற்றியில் முறைகேடு நடந்துள்ளது என தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
தேர்தல் வெற்றி
இந்த நிலையில் ஜோபிடன் தேர்தலில் வெற்றி பெற்றதாக அறிவிக்க கடந்த புதன்கிழமை நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் கூடின. அப்போது டிரம்ப் தனது ஆதரவாளர்கள் மூலம் அங்கு ஒரு பிரளயத்தையே உண்டு செய்தார். இந்த கலவரத்தை ஒடுக்க போலீஸார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் ஒரு பெண் பலியானார்.
வன்முறை
மேலும் தள்ளுமுள்ளு ஏற்பட்டு 3 பேர் உயிரிழந்தார்கள். இதனிடையே எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல் டிரம்ப் வீடியோவில் உரையாற்றினார். அது வன்முறையை தூண்டும் வகையில் இருந்தது. இதையடுத்து டிரம்பின் ட்விட்டர், பேஸ்புக், யூடியூப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பக்கங்கள் முடக்கப்பட்டன.
பேச்சு சுதந்திரம்
12, 24 மணி நேரத்திற்கு முடக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில் டிரம்ப் எந்த நேரத்திலும் வன்முறையை தூண்டும் வகையில் பேசுவார் என்பதால் அவரது ட்விட்டர் கணக்கு நிரந்தரமாக மூடப்பட்டது. இதற்கு டிரம்ப் கடும் கண்டனம் தெரிவித்தார். அதிபருக்கான ட்விட்டர் கணக்கில் அவர் கூறுகையில் ட்விட்டர் நிறுவனம் எனது பேச்சு சுதந்திரத்தை தடை செய்துவிட்டது.
ட்வீட் நீக்கம்
என்னை பேசாமல் அமைதியாக இருக்க செய்வதற்காகவே கணக்கை நீக்கியுள்ளது. ட்விட்டர் நிறுவனத்தினர் ஜனநாயக கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறார்கள். கருத்துகளை சுதந்திரமாக பதிவு செய்யும் வகையில் எதிர்காலத்தில் சொந்த தளத்தை அதாவது ட்விட்டருக்கு மாற்றாக ஒரு தளத்தை உருவாக்க ஆராய்ந்து வருவதாக தெரிவித்தார். அடுத்த சில நிமிடங்களில் அந்த ட்வீட்டும் நீக்கப்பட்டுவிட்டது.