ஆபிரகாம் லிங்கனுக்கு பிறகு கருப்பின மக்களுக்கு நல்லது செய்தது நான் மட்டுமே -டிரம்ப்
வாஷிங்டன்: ஆபிரகாம் லிங்கனுக்கு பிறகு கருப்பின மக்களுக்கு நன்மை செய்தது தாம் மட்டுமே என அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
நாஷிவில்லில் ஜோ பிடனுடன் நடத்திய நேரடி விவாதத்தில் அவர் இந்த கருத்தை பதிவு செய்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் டிரம்பும் ஜோ பிடனும் நேரடியாக நடத்திய விவாதத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து மனம் விட்டு விவாதித்துக்கொண்டனர். கொரோனாவில் தொடங்கி சுற்றுச்சூழல் வரை அவர்கள் இருவரும் தங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
அந்த வகையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் டிரம்ப் முறையான செயல் திட்டம் வகுத்து செயல்படவில்லை என ஜோ பிடன் குற்றஞ்சாட்டினார். கொரோனாவின் தீவிரத்தன்மை குறித்து கடந்த ஜனவரி மாதமே டிரம்புக்கு தெரிந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அவர் மேற்கொள்ளவில்லை என குற்றஞ்சாட்டினார்.
இதற்கு பதிலடி கொடுத்துப் பேசிய டிரம்ப், தமது அரசின் நடவடிக்கைகளால் அமெரிக்காவில் கொரோனா உயிரிழப்புகள் வெகுவாக குறைக்கப்பட்டது என்றும் தாம் கூறிய காலத்திற்குள் கொரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு வரக்கூடும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷியாவின் தலையீடு... ஜோ பிடன் பரபரப்புக் குற்றச்சாட்டு
இதனிடையே டிரம்பை நோக்கி நீங்கள் ஏன் மாஸ்க் அணிய மறுக்கிறீர்கள் என ஜோ பிடன் கேள்வி எழுப்பிய போது, அதற்கு நேரடியாக பதில் கூறுவதை விடுத்து சுற்றிவளைத்துப் பேசி பொதுமுடக்கம் மற்றும் கொரோனாவை விட்டால் ஜோ பிடனுக்கு வேறு எதுவும் தெரியாது எனக் கூறினார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் பிறநாடுகள் தலையீடுகள் இருப்பதை தன்னால் நன்கு உணர முடிகிறது என்றும் கடும் பின் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் ஜோ பிடன் எச்சரித்தார். டிரம்ப் ரஷியாவை பற்றி ஏன் வாய் திறப்பதில்லை என வினவிய ஜோ பிடன் தாம் ஆட்சிக்கு வந்தால் எதிராளிகளுடன் ஒரு போதும் கைகோர்க்க மாட்டேன் எனத் தெரிவித்தார்.
இதையடுத்து ஜோ பிடனுக்கு பதிலடி கொடுத்த டிரம்ப், ரஷியாவில் இருந்து உங்கள் குடும்பத்தினரை போல் நான் பணம் பெறவில்லை எனக் கூறினார். இதனை திடமாக மறுத்த ஜோ பிடன் ரஷியாவிடம் இருந்து ஒரு பைசா கூட தாம் வாங்கியதில்லை என்றார்.
மேலும், அமெரிக்க அதிபர் டிரம்ப் சீன வங்கியில் கணக்கு வைத்துக்கொண்டு சீனாவிடம் இருந்து பணம் பெற்றதாக குற்றஞ்சாட்டினார். அதற்கு பதிலளித்த டிரம்ப், அதிபராக வருவதற்கு முன் தாம் ஒரு தொழிலதிபர் என்றும் அதனடிப்படையில் எல்லா தொழிலதிபர்களையும் போல் தாமும் ஒரு காலத்தில் சீனாவுடன் வர்த்தகம் செய்ததாகவும் ஆனால் இப்போது அப்படியில்லை எனவும் விளக்கினார்.
அமெரிக்காவில் கருப்பின மக்களின் உரிமைகள் பறிக்கப்படுவதாக ஜோ பிடன் குற்றஞ்சாட்டிய நிலையில், ஆபிரகாம் லிங்கனுக்கு பிறகு கருப்பினத்தவர்களுக்கு நன்மை செய்த ஒரே நபர் தாம் தான் என்று ஒபாமாவை சூசகமாக சாடினார். மேலும், விவாத அறையை சுட்டிக்காட்டிய டிரம்ப், இந்த அரங்கில் இனவெறி அல்லாத நபர் என்றால் அது தாம் தான் என தனக்கு தானே பெருமிதம் தெரிவித்துக்கொண்டார். கருப்பின மக்களுக்கான உரிமைகள் பறிப்போவதாக பிடன் கூறுவது வேடிக்கையாக உள்ளது என டிரம்ப் கூறினார்.
டிரம்புக்கு பதிலளித்த ஜோ பிடன், இனவெறியை மூட்டி அதில் குளிர்காயக் கூடியவர் நீங்கள் என டிரம்பை நோக்கி கூறினார். இதனை அடியோடு மறுத்த டிரம்ப், பிடன் கொண்டு வந்த திட்டங்களால் தான் கருப்பின மக்கள் பாதிக்கப்பட்டதாக பதிலடி கொடுத்தார்.