இந்தியா செய்த உதவியை ஒருபோதும் மறக்கமாட்டேன்... அமெரிக்க அதிபர் டிரம்ப் நெகிழ்ச்சி
வாஷிங்டன்: ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருத்து விவகாரத்தில் இந்தியா செய்துள்ள உதவியை தாம் ஒரு போதும் மறக்கமாட்டேன் என அமெரிக்க அதிபர் டிரம்ப் நெகிழ்ந்துள்ளார்.
கொரோனா வைரஸ் பாதிப்பு அமெரிக்காவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் அதனை கட்டுக்குள் கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மிகத் தீவிரமாக முன்னெடுத்துள்ளார் டிரம்ப். இந்நிலையில் மலேரியா எதிர்ப்பு மருந்தான ஹைட்ராக்ஸி குளோரோ குயின் கொரோனா பாதிப்புக்கு ஓரளவு பலன் தருவதால் அதனை இந்தியாவிடம் இருந்து பிரேஸில், அமெரிக்கா, உள்ளிட்ட பல நாடுகளும் கேட்டு வந்தன. ஆனால் ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்தை ஏற்றுமதி செய்ய இந்தியா தடை விதித்திருந்ததால் பிற நாடுகளுக்கு அவை அனுப்பப்படாமல் இருந்தன.
இதனிடையே பிரதமர் மோடியிடம் கடந்த வாரம் தொலைபேசி வாயிலாக பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப் ஹைட்ராக்ஸி குளோரோ குயின் உள்ளிட்ட மருந்துகள் ஏற்றுமதி மீதான தடையை நீக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். இதையடுத்து மனிதநேயத்தின் அடிப்படையில் மருந்து ஏற்றுமதிக்கு விதித்திருந்த தடையை நீக்கியது இந்தியா. இதனிடையே டிரம்ப் இந்தியாவை மிரட்டும் தொணியில் பேசியதாக செய்தி வெளியாகி அது சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அது குறித்து இந்திய வெளியுறவுத்துறை தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.
Extraordinary times require even closer cooperation between friends. Thank you India and the Indian people for the decision on HCQ. Will not be forgotten! Thank you Prime Minister @NarendraModi for your strong leadership in helping not just India, but humanity, in this fight!
— Donald J. Trump (@realDonaldTrump) April 8, 2020
நேற்று முன் தினம் அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மருந்தை இந்தியா அனுப்பி வைத்த நிலையில், இந்திய மக்களுக்கும், இந்தியாவுக்கும் தனது நன்றியை உரிதாக்கி கொள்வதாக தெரிவித்துள்ளார். மேலும், அசாதாரண சூழலில் இந்தியா செய்துள்ள உதவியை தாம் ஒரு போதும் மறக்கமாட்டேன் என நெகிழ்ந்துள்ளார். இதுபோன்ற இக்கட்டான காலகட்டங்களில் தான் நட்பு நாடுகளுக்கு இடையே நெருக்கமான ஒத்துழைப்பு தேவைப்படுவதாகவும், கொரோனாவை அழிக்கும் இந்த போராட்டத்தில் மனிதநேயத்துடன் உதவி புரிந்த இந்தியாவின் வலிமையான தலைவர் பிரதமர் மோடிக்கு தனது நன்றியை தெரிவித்துக்கொள்வதாகவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.