அமெரிக்கா உள்பட இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதல்களிலும் சுலைமானிக்கு பங்குண்டு.. டிரம்ப் குண்டு
Recommended Video
வாஷிங்டன்: இந்தியாவில் நடந்த தீவிரவாத தாக்குதல்களில் ஈரான் படை தலைவர் சுலைமானிக்கு பங்கு உண்டு என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
ஈராக் தலைநகர் பாக்தாத்தில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் ஈரான் நாட்டு படைத்தலைவர் காசிம் சுலைமானி கொல்லப்பட்டார். சுலைமானி கொலை உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதை அதிபர் டிரம்ப் நியாயப்படுத்தியுள்ளார். நேற்று புளோரிடா மாகாணத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறுகையில் அண்மையில் ஈராக்கில் அமெரிக்காவின் இலக்குகளை குறிவைத்து வான்வழி தாக்குதல்களை நடத்தியது. இதில் அமெரிக்கர் ஒருவர் பலியானார். 4 வீரர்கள் படுகாயமடைந்தனர்.
இந்தியா
பாக்தாத்தில் அமெரிக்க தூதரகத்தின் மீதும் வன்முறை தாக்குதல் நடத்தப்பட்டது. இவற்றுக்கு மூளையாக செயல்பட்டது சுலைமானி. அவர் அப்பாவி மக்களை கொன்று குவித்துள்ளார். இந்தியா உள்பட உலக நாடுகளில் நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் அவருக்கு பங்கு உண்டு.
உயிர்கள்
இன்று சுலைமானி கொல்லப்பட்டதன் மூலம் அவரது பயங்கரவாதம் முடிவுக்கு வந்துவிட்டது. அமெரிக்கா இந்த தாக்குதலை நீண்ட காலத்துக்கு முன்பே நடத்தியிருக்க வேண்டும். அவ்வாறு நடத்தியிருந்தால் ஏராளமான உயிர்கள் காப்பாற்றப்பட்டிருக்கும்.
சுலைமானி
அண்மையில் ஈரானில் நடந்த போராட்டத்தின் போது அந்த நாட்டில் சொந்த மக்கள் 1000 பேர் கொல்லப்பட்டனர். இதை நடத்தியதும் சுலைமானிதான். இந்த நடவடிக்கையை நாங்கள் எடுக்கக் காரணம் போர் வராமல் பார்த்துக் கொள்ளத்தான்.
மறைமுக போராளிகள்
ஈரான் மக்கள் மீது நாங்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். அவர்கள் வளமான பாரம்பரியமும் கட்டுக்கடங்காத ஆற்றலும் கொண்டவர்கள். எங்களுக்கு ஈரானில் ஆட்சி மாற்றம் தேவையில்லை. ஆனால் அண்டை நாடுகளை சீர்குலைக்க மறைமுக போராளிகளை பயன்படுத்துதல் போன்றவற்றை இப்போது முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றார்.