சீனாவின் பெருந்தவறு.. அதிக விலை கொடுத்த உலக நாடுகள்.. டிரம்ப் புகார்.. ஓயாத சண்டையின் பின்னணி என்ன?
வாஷிங்டன்: கொரோனா வைரஸ் குறித்த தகவலை சீனா மறைத்ததால் உலக நாடுகள் தற்போது பெரும் விலை கொடுத்து வருவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.
மிகப் பெரிய கட்டுக்கடங்காத உயிர்க் கொல்லியான கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் 9000 பேர் உயிரிழந்துவிட்டனர். உலகம் முழுவதும் 2,10,300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த வைரஸ் ஒரு தொற்று வியாதி என உலக சுகாதார நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
இந்த நிலையில் அமெரிக்காவும் சீனாவும் தற்போது சண்டையிட்டு கொள்கின்றன. ஏற்கெனவே சீன பொருளுக்கு அமெரிக்காவில் அதிக வரியும் அமெரிக்க பொருளுக்கு சீனா அதிக வரியும் விதித்துள்ளது. பொருளாதார ரீதியிலாக இதுபோன்ற சண்டைகள் இரு நாடுகளுக்கும் இடையே நிலவி வந்தது.
கொரோனா எதிரொலி.. புதுச்சேரி ஏனாமில் 144 தடை.. பொதுமக்களுக்கு கடும் கட்டுப்பாடு!
செய்தியாளர்கள் சந்திப்பு
இவ்வாறிருக்கையில் சீனாவில் உள்ள அமெரிக்க படைகள்தான் கொரோனா வைரஸை எங்கள் நாட்டில் பரப்பி பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தி விட்டன என அந்நாட்டு வெளியுறவுத் துறை அதிகாரி குற்றம்சாட்டியிருந்தார். இதற்கு டிரம்ப் பதிலடி கொடுத்தார். அதில் கொரோனா வைரஸ் பரவியதற்கு காரணமே சீனாதான் என கூறியிருந்தார். இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் கூறியிருந்தார்.
நிராகரிப்பு
இதையடுத்து இதுகுறித்து வெள்ளை மாளிகையில் நேற்று முன் தினம் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பெண் செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பினார். கொரோனா வைரஸ் பாதிப்பிற்கு சீனாவை காரணம் காட்டுவது எந்த விதத்தில் நியாயம் என கேட்டிருந்தார். அதற்கு அவரோ அவர்கள் மட்டும் அமெரிக்கா மீது குறை சொல்லலாம், நாங்கள் சொல்லக் கூடாதா என கேட்டார். மீண்டும் மீண்டும் அந்த பெண் சீனா குறித்து கேள்வி கேட்டதால் காண்டான டிரம்ப் அந்த பெண்ணை நிராகரித்துவிட்டு அடுத்த நிருபரை கேள்வி கேட்க சொன்னார்.
உத்தரவு
இதனிடையே அமெரிக்காவில் உள்ள சீன ஊடகங்கள் டிரம்பின் குற்றச்சாட்டு குறித்து பூதாகரமான செய்திகளை போட்டு அவரை கடுமையாக விமர்சித்தன, இதையடுத்து சீன பத்திரிகையாளர்கள் 3 பேரை டிரம்ப் வெளியேற்றினார். அவர்களிடம் இருந்து பிரஸ் கார்டையும் பறித்துக் கொண்டார். இதற்கு பழி வாங்கும் படலமாக சீனாவும் தங்கள் நாட்டில் உள்ள நியூயார்க் டைம்ஸ் உள்ளிட்ட 3 பத்திரிகைகளின் அமெரிக்க நிருபர்களை வெளியேற உத்தரவு பிறப்பித்துள்ளது.
உயிரிழப்புகள்
எனினும் இரு நாடுகளுக்கிடையேயான போட்டா போட்டி சண்டை பெரிதாகவே வெடித்துள்ளது. இந்த நிலையில் நேற்றைய தினம் வெள்ளை மாளிகையில் டிரம்ப் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில் சீனாவால் உலகம் முழுவதும் பெரிய விலை கொடுத்து வருகின்றன. சீனா மட்டும் முன் கூட்டியே கொரோனா குறித்து தகவல் கூறியிருந்தால் இத்தனை உயிரிழப்புகள் நடந்திருக்காது.
எதிர்வினை
மக்களுக்கு தெரியப்பட்டிருந்தால் அவர்கள் எல்லை தாண்டாதவாறு அதே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்திருப்பர். சீனாவிலிருந்து வந்த இந்த வைரஸை மற்ற நாடுகளுக்கு செல்லாதவாறு தடுத்து நிறுத்தியிருக்கலாம். வைரஸ் பரவலை சீனா மறைத்துவிட்டதால் உலக நாடுகளே தற்போது இந்த கொடூர வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளன. இது பெரும் தவறு என தெரிவித்துள்ளார். சீனாவுக்கு எதிராக ஏதேனும் எதிர்வினைகள் ஆற்றப்படுமா என்ற கேள்விக்கு பதிலளிப்பதை அவர் மறுத்துவிட்டார்.
உயிரிழந்த மருத்துவர்
கொரோனா பாதிப்பு குறித்து டிசம்பர் மாதத்திற்கு முன்னரே ஒரு நோயாளியின் ரத்த மாதிரி மூலம் சீன மருத்துவர் லீ வென்லியாங் கண்டறிந்தார். இதுகுறித்து சீன அரசிடம் தெரிவித்தார். இதன் அபாயம் குறித்தும் வீரியம் குறித்தும் தெரிவித்தார். ஆனாலும் இவரது கருத்தை சீன அரசு உதாசீனப்படுத்தியது. வெளியுலகிற்கு சொல்லாமல் மறைத்தது. இதையடுத்து அந்த நாட்டில் கொத்து கொத்தாக மடிந்த போதுதான் நிலைமை மோசமானதை உணர்ந்து வெளியுலகிற்கு வைரஸ் குறித்து அறிவித்தது. எனினும் இந்த வைரஸை முதலில் கண்டறிந்த லீ வென்லியாங் இதே வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.