அமெரிக்காவில் வென்டிலேட்டர்கள் தட்டுப்பாடு.. 100 நாட்களில் 1 லட்சம் கருவிகள் தயாரிப்பு.. டிரம்ப்
வாஷிங்டன்: 100 நாட்களில் ஒரு லட்சம் செயற்கை சுவாச கருவிகள் தயாரிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. இங்கு நேற்று ஒரே நாளில் 401 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். நியூயார்க் நகரத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக உள்ளது.
இதனால் அங்கு 10 பேரில் 9 பேர் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அமெரிக்காவில் செயற்கை சுவாசக் கருவிகளுக்குத் தட்டுப்பாடு நிலவி வருகிறது. ஒரு செயற்கை சுவாசக் கருவியை இரு நோயாளிகளுக்கு பயன்படுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகையில் இன்னும் 100 நாட்களில் ஒரு லட்சம் செயற்கை சுவாசக் கருவிகளை அமெரிக்கா தயார் செய்யவுள்ளது. இத்தனை கருவிகளையும் அமெரிக்காவே பயன்படுத்தாது. தேவைப்படும் நாடுகளுக்கும் இது அளிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
5 நிமிடங்களில் கொரோனா வைரஸ் இருக்கிறதா இல்லையா என்பது குறித்து விரைவு சோதனை மூலம் கண்டறியப்படும். அபாட் லேபாரட்டரீஸ் உருவாக்கிய இந்த விரைவு சோதனை கருவியை பயன்படுத்த அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து துறை ஒப்புதல் அளித்துள்ளது.
வைரஸ் இருந்தால் 5 நிமிடங்களிலும் இல்லாவிட்டால் 13 நிமிடங்களிலும் முடிவுகளை கொடுக்கும் என அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.