அமெரிக்க பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச் சூடு.. 2 பேர் பலி
வாஷிங்டன்: அமெரிக்காவின் சார்லட், வடக்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் கொல்லப்பட்டுள்ளனர், 4 பேர் காயமடைந்துள்ளனர்.
வடக்கு கலிபோர்னியா பல்கலைக்கழகத்தை சேர்ந்த மாணவர் ஒருவர் துப்பாக்கிச் சூடு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சார்லட்-மெக்லன்பர்க் காவல்துறை செய்தித் தொடர்பாளர் சான்டி டிஎலோசுவா கூறுகையில், இந்த துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டது ஒரே நபர்தான் என்று சந்தேகிக்கிறோம், மேலும் அவர் கைது செய்யப்பட்டுள்ளார் என்றார். கலிபோர்னியா நேரப்படி மாலை 5.45 மணிக்கு இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் பல்கலைக்கழகத்தின், கென்னடி ஹால் பகுதியில் நடந்துள்ளது.
"பல்கலைக்கழக வளாகத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டால் அதிர்ச்சியடைந்துள்ளோம். பாதிக்கப்பட்டோர் குடும்பத்திற்கு ஆறுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். பாதுகாப்பு வீரர்கள் தீரத்தோடு சென்று மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்" என்று தெரிவித்துள்ளார் சார்லட் மேயர் வி லைல்ஸ்.
பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் துப்பாக்கிச் சூடுகள் நடைபெறுவது அமெரிக்காவில் சகஜமாகிவிட்டது. 2007ம் ஆண்டு, விர்ஜினியா, பிளேக்பர்க் பல்கலைக்கழகத்தில் தென் கொரியா மாணவர், சரமாரியாக துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 32 பேர் கொல்லப்பட்டனர். பிறகு அந்த மாணவர் தற்கொலை செய்து கொண்டார். இது மிகப்பெரிய தாக்குதல் என்றபோதிலும், இதன்பிறகு, அவ்வப்போது அமெரிக்காவில் துப்பாக்கிசூடு சம்பவங்கள் நடந்து கொண்டேதான் உள்ளன.