அமெரிக்க நாடாளுமன்ற கலவரம்.. பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு போலீஸ் தற்கொலை.. காரணம் என்ன?
வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்ற கலவரத்தின்போது, அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரண்டு போலீஸ் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பைடன், கமலா ஹாரிஸ் பெற்ற வெற்றியை அங்கீகரிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது டிரம்ப் ஆதரவாளர்கள் திடீரென்று உள்ளே புகுந்து வன்முறையில் ஈடுபட்டனர். இந்த வன்முறைச் சம்பவத்தில் ஐந்து பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற கலவரத்தின்போது அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இரு காவலர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். அவர்களில் ஒருவர் நாடாளுமன்ற காவல் துறையைச் சேர்ந்தவர், மற்றொருவர் மாவட்ட போலீஸ் பிரிவைச் சேர்ந்தவர். இத்தகவலை கொலம்பியா காவல் துறை உறுதி செய்துள்ளது.
அமெரிக்க நாடாளுமன்ற கலவரத்தின்போது ஏற்பட்ட மன அழுத்தத்தால் இவர்கள் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அதேபோல, மற்றொரு போலீஸ் அதிகாரி கலவரத்தின்போது ஏற்பட்ட காயத்தினால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதனால் அமெரிக்க நாடாளுமன்ற கலவரத்தினால் உயிரிழந்த காவலர்களின் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது.
இந்தக் கலவரத்தின்போது, அமெரிக்க எம்பிகள் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அதன் பின்னர், பாதுகாப்புத் துறை படையின் ஒத்துழைப்புடன் வன்முறையாளர்கள் நாடாளுமன்றத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர்.
அமெரிக்க கலவரம்... அலேக்காக 150 பேரை தூக்கிய எஃபிஐ... மேலும் 400 பேருக்கு ஸ்கெட்ச்
அதைத்தொடர்ந்து ஜோ பைடன், கமலா ஹாரிஸ் வெற்றியை அங்கீகரிக்கும் நிகழ்வு நடத்தப்பட்டது. இந்த வன்முறைச் சம்பவத்திற்கு டிரம்ப்தான் காரணம் என்று ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால் அவர் மீது பதவி நீக்கத் தீர்மானமும் கொண்டு வரப்பட்டுள்ளது.