கொரோனா குணமாகி வெள்ளை மாளிகை திரும்பிய ட்ரம்ப் - மாஸ்க் அகற்றியதால் மருத்துவர்கள் எச்சரிக்கை
கொரோனா சிகிச்சை முடிந்து வெள்ளை மாளிகைக்கு திரும்பியுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப் 10 நாட்கள் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
வாஷிங்டன்: கொரோனா தொற்று குணமடைந்ததை அடுத்து வெள்ளை மாளிகைக்கு வந்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முக கவசத்தை கழற்றி பாக்கெட்டில் வைத்துக்கொண்டு போட்டோவிற்கு போஸ் கொடுத்தார். சிகிச்சை முடிந்து வெள்ளை மாளிகைக்கு திரும்பினாலும் தொடர்ந்து 10 நாட்கள் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
கொரோனாவை அலட்சியமாக கருதி மாஸ்க் அணிவதை தவிர்த்து வந்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு கடந்த 2ஆம் தேதியன்று கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து அவர் வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு வல்லுநர்கள் மேற்பார்வையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
நான்கு நாட்கள் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் தனது உடல்நிலை குறித்து விளக்கி டொனால்ட் ட்ரம்ப் வீடியோ ஒன்றை வெளியிட்டார் அதில், தான் தற்போது நலமாக இருப்பதாகவும், விரைவில் பணிக்கு திரும்ப நம்பிக்கையுடன் இருப்பதாகவும் ட்ரம்ப் தெரிவித்தார்.
ட்ரம்ப் நம்பிக்கை
நான் விரைவில் திரும்பிவிடுவேன் என நம்புகிறேன். மீண்டும் பிரச்சாரப் பணிகளை முடிக்க விரும்புகிறேன்.
உலகம் முழுக்க லட்சக்கணக்கானோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த கொரோனாவை நாம் வீழ்த்த
வேண்டும் என்றும் கூறினார் ட்ரம்ப். திடீரென்று மருத்துவமனையில் இருந்து காரில் வெளியே வந்து
ஆதரவாளர்களை குஷி படுத்தும் வகையில் கையசைத்தார் ட்ரம்ப்.
ட்ரம்ப் குணமடைந்தார்
இந்த நிலையில் ட்ரம்ப் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டதாக மருத்துவர்கள் கூறினர். ஆக்சிஜன்
அளவு சீராக இருந்ததாகவும் மூச்சுத்திணறல் எதுவும் ஏற்படவில்லை என்றும் மருத்துவர்கள் கூறினர். கொரோனா நோய் தொற்றில் இருந்து முற்றிலும் குணமடைந்த ட்ரம்ப் வால்டர் ரீட் மருத்துவ மையத்தில் இருந்து வீடு திரும்புகிறேன். நான் நன்றாக இருக்கிறேன். யாரும் கோவிட் தொற்றுக்கு அச்சம் அடைய வேண்டாம் என்று ட்விட்டரில் பதிவிட்டார்.
நலமாக இருக்கிறேன்
உங்களது வாழ்க்கையை கொரோனா ஆக்கிரமிக்க அனுமதிக்காதீர்கள். கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததைவிட தற்போது நன்றாக இருக்கிறேன் என்று பதிவிட்டார். தேர்தல் பிரசார நிகழ்ச்சிகளில் விரைவில் பங்கேற்பேன் என்றும் தெரிவித்தார்.
மாஸ்க் அகற்றிய ட்ரம்ப்
வால்டர் ரீட் ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை முடிந்ததை அடுத்து நடந்து சென்று ஹெலிகாப்டர் மூலம் வெள்ளை மாளிகைக்கு திரும்பினார் ட்ரம்ப். வெள்ளைமாளிகையின் மேல் தளத்திற்கு சென்ற டிரம்ப் தனது முகக்கவசத்தை கழற்றி பாக்கெட்டில் வைத்துக்கொண்டார். இதனையடுத்து தனது ஆதரவாளர்களுக்கும், அமெரிக்க மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக இரண்டு விரல்களை உயர்த்தினார்.
ட்ரம்ப் தொடர் கண்காணிப்பு
ட்ரம்ப் அமெரிக்க அதிபர் என்பதால் கொரோனா சிகிச்சை முடிந்து விரைவில் வெள்ளை மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் அதிபர் தேர்தல் பிரச்சாரத்தில் ட்ரம்ப் விரைவில் பங்கேற்பார் என்று வெள்ளை மாளிகை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
— Donald J. Trump (@realDonaldTrump) October 5, 2020