60 நாடுகளில் உருமாறிய கொரோனா... தடுப்பூசி வேலை செய்யுமா... உலக சுகாதார அமைப்பு பகீர் தகவல்
வாஷிங்டன்: பிரிட்டனில் கண்டறியப்பட்ட உருமாறிய கொரோனா வைரஸ் தற்போதுவரை 60க்கும் மேற்பட்ட நாடுகளில் கண்டறியப்பட்டுள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலகில் கொரோனா பாதிப்பு கடந்த சில மாகங்களாக மீண்டும் அதிகரித்து வருகிறது. இந்த இரண்டாவது அலையில் கொரோனா பாதிப்பு மிகவும் மோசமாக இருக்கலாம் என்று வல்லுநர்கள் கணித்துள்ளனர்.
நிலைமை மோசமாவதைத் தடுக்க கொரோனா தடுப்பூசி வழங்குவதே ஒரே நம்பிக்கையாகப் பார்க்கப்படுகிறது. இதற்காக ஃபைசர், மாடர்னா, ஆக்ஸ்போர்ட் தடுப்பூசிகளுக்கு பல்வேறு நாடுகளும் ஒப்புதல் அளித்துள்ளன.
உருமாறிய கொரோனா
இந்தச் சூழ்நிலையில்தான், கடந்த நவம்பர் மாதம் பிரிட்டனில் புதிய உருமாறிய கொரோனா வைரஸை ஆராய்ச்சியாளர்கள் உறுதி செய்தனர். இந்த உருமாறிய கொரோனா அதிக தீவிரமானது இல்லை என்றாலும்கூட இவை மற்ற கொரோனா வகைகளைவிட 70% வேகமாகப் பரவுவதாக ஆராய்ச்சியாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
60 நாடுகளுக்குப் பரவிய உருமாறிய கொரோனா
பிரிட்டனில் கண்டறியப்பட்டுள்ள உருமாறிய கொரோனா இதுவரை குறைந்தபட்சம் 60 நாடுகளுக்குப் பரவியிருக்கும் என்று உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இதேபோல தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட அதிக பாதிப்பை ஏற்படுத்தும் மற்றொரு வகை கொரோனா தற்போதுவரை 23 நாடுகளுக்குப் பரவியுள்ளது. இதனால் வரும் காலங்களில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.
தடுப்பூசிகள் பலன் அளிக்குமா
தற்போது பயன்படுத்தும் அனைத்து தடுப்பூசிகளும் உருமாறிய கொரோனாவுக்கு முன்னரே கண்டுபிடிக்கப்பட்டவை. எனவே, இந்தத் தடுப்பூசிகளுக்கு உருமாறிய கொரோனா கட்டுப்படுமா என்ற கேள்வியும் எழுந்தன. ஆனால், இந்த கேள்விகளை முற்றிலுமாக மறுத்துள்ள ஆராய்ச்சியாளர்கள், அனைத்து வகை கொரோனாகளுக்கு எதிராகவும் தடுப்பூசிகள் செயல்படும் என்றனர். இருப்பினும், ஒரு தரப்பு ஆராய்ச்சியாளர்கள் தென் ஆப்பிரிக்கா வகை கொரோனாவுக்கு எதிராகத் தடுப்பூசி வேலை செய்யாமல் போகலாம் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தடுப்பூசி செலுத்தும் பணிகள்
உலகெங்கும் 93 ஆயிரம் பேர் கொரோனாவால் கடந்த ஒரே வாரத்தில் உயிரிழந்துள்ளனர். அதேபோல சுமார் 47 லட்சம் பேருக்குப் புதிதாக கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகளும் அமெரிக்காவும் தடுப்பூசி செலுத்தும் பணிகளைத் தீவிரப்படுத்தியுள்ளன. வரும் ஆகஸ்ட் மாத்திற்குள், சுமார் 70% மக்களுக்குத் தடுப்பூசி செலுத்த ஐரோப்பிய ஒன்றியம் திட்டமிட்டுள்ளது. அதே நேரம் ரஷ்யா, இந்தியா போன்ற நாடுகளில் தடுப்பூசி மீது மக்களுக்கு போதிய நம்பிக்கை இல்லாததால், இந்த நாடுகளில் தடுப்பூசி செலுத்தும் பணிகள் மந்தமாகவே நடைபெறுகிறது.