இந்தியாவில் வயதாகும் அணைகளால் அச்சுறுத்தல்.. முல்லை பெரியாறு அணையையும் குறிப்பிட்ட ஐநா!
வாஷிங்டன்: இந்தியாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெரிய அணைகள் 2025 ஆம் ஆண்டில் சுமார் 50 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும். உலகெங்கிலும் இதுபோன்ற வயதான அணைகள், அச்சுறுத்தலை ஏற்படுத்தும் என்று ஐ.நா அறிக்கை கூறுகிறது. 2050 வாக்கில் பூமியில் உள்ள பெரும்பாலான மக்கள் 20 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட அணைகளை நம்பித்தான் வாழ்வார்கள் என்றும் கூறியுள்ளது.
அணைகள் பலவீனடைவது அதிகரிக்கும், பராமரிப்பு செலவுகளை படிப்படியாக அதிகரிக்கும்,. நீர்த்தேக்கத்தில் வண்டல் மண் அதிகரிக்கும், அணையின் செயல்பாடு மற்றும் செயல்திறன் பாதிப்பு என அடுத்தடுத்து பல பாதிப்புகள் வயதான அணைகளால் ஏற்படும் என ஐநாவின் அறிக்கை கூறுகிறது.
ஐ.நா. பல்கலைக்கழக பகுப்பாய்வின் படி, 2050 ஆம் ஆண்டளவில், பூமியில் உள்ள பெரும்பாலான மக்கள் 20 ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பல்லாயிரக்கணக்கான பெரிய அணைகளையே நம்பியே வாழ்வார்கள், அவற்றில் பல ஏற்கனவே வடிவமைப்புகள் மற்றும்பலம் குறித்த கேள்விகளை எழுப்புகின்றன. அமெரிக்கா, பிரான்ஸ், கனடா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஜிம்பாப்வே ஆகிய நாடுகளில் வயதான அணைகள் எண்ணிக்கை அதிகரிக்கும்.
150 ஆண்டு அணைகள்
ஐ.நா. அறிக்கையின்படி, 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் இருந்ததைப் போல மற்றொரு பெரிய அணை கட்டும் புரட்சியை உலகம் காண வாய்ப்பில்லை, ஆனால் பின்னர் கட்டப்பட்ட அணைகள் தவிர்க்கவே முடியாத சூழலை உலக நாடுகள் சந்திக்கும். அவற்றில் பல 50 முதல் 150 ஆண்டுகள் வரை வயதை எட்டும்.
நான்கு நாடுகளில்
சீனா, இந்தியா, ஜப்பான் மற்றும் தென் கொரியா ஆகிய நான்கு ஆசிய நாடுகளில் 32,716 பெரிய அணைகள் (உலகின் மொத்தத்தில் 55 சதவீதம்) காணப்படுகின்றன இவற்றில் பெரும்பாலானவை 50 ஆண்டுகளை விரைவில் எட்ட போகின்றன. ஏன் ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள பல பெரிய அணைகளின் வயதும் 50ஐ எட்ட போகின்றன.
50 ஆண்டு பழமையானவை
இந்தியாவில், 1,255 க்கும் மேற்பட்ட பெரிய அணைகள் உள்ளன, அவை 2025 ஆம் ஆண்டில் சுமார் 50 ஆண்டுகள் பழமையானவை, நாட்டில் 4,250 க்கும் மேற்பட்ட பெரிய அணைகள் 2050 ஆம் ஆண்டில் 50 வயதுக்கு மேல் இருக்கும். மேலும் 64 பெரிய அணைகள் 2050 ஆம் ஆண்டில் 150 ஆண்டுகளை கடந்தவையாக இருக்கும் என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 100 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட முல்லைப்பெரியாறு அணையின் வயது 2050ல் 150 ஆக உயர்ந்துவிடும். இந்த அணையை பற்றியும் ஐநாவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பலமாக உள்ளது
முல்லை பெரியாறு அணை சுண்ணாம்பு, செங்கல்தூள், களிமண் உள்ளிட்ட சுருக்கி கலவையால் கட்டப்பட்டது. இந்த அணை மிகவும் பலமாக உள்ளது. எனினும் கேரளா இந்த அணை பலமிழந்து உள்ளதாகவும், இதற்கு பதில் புதிய அணை கட்ட வேண்டும் என்று தொடர்ந்து குறை கூறி வருகிறது. நிலநடுக்கம் நிறைந்த பகுதியில் அணை உள்ளதாக கூறி, அணையின் கட்டமைப்பை அடிக்கடி குறை கூறி வருகிறது. முல்லை பெரியாறு அணை உடைந்தால் 3.5லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்றும் அங்கு அவ்வப்போது பீதி கிளப்பப்பட்டு வருகிறது. இதற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்து வருகிறது. அணை பாதுகாப்பாக உள்ளதாக தமிழகம் கூறி வருகிறது. உச்ச நீதிமன்றமும் அணை பலமாக உள்ளதை உறுதி செய்து 142 அடி வரை தேக்கலாம் என உத்தரவிட்டது. அதன்படியே இப்போது அணை பராமரிப்பு பணிகள் நடக்கிறது.
அணைகள் எவ்வளவு
இந்தியாவை தவிர்த்து அமெரிக்காவில் என்று பார்ததால் அங்கு உள்ள 90,580 அணைகளின் சராசரி வயது 56 ஆண்டுகள். 2020 ஆம் ஆண்டில் அமெரிக்க அணைகளில் 85 சதவிகிதத்திற்கும் அதிகமாக 56 ஆண்டுகளை கடந்தவை ஆகும். இப்போது உள்ள அமெரிக்க அணைகளை புதுப்பிக்க 64 பில்லியன் அமெரிக்க டாலர் செலவாகும். கடந்த 30 ஆண்டுகளில் 21 அமெரிக்க மாநிலங்களில் கிட்டத்தட்ட 1,275 அணைகள் அகற்றப்பட்டன; 2017 இல் மட்டும் 80 நீக்கப்பட்டதாக ஐநா அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.
கவனம்
ஐநாவின் அணைகள் குறித்த அறிக்கையின் நோக்கம் குறித்து இணை எழுத்தாளர் விளாடிமிர் ஸ்மக்தின் கூறுகையில், வயதான அணைகளின் பிரச்சினை குறித்து உலகளாவிய கவனத்தை ஈர்ப்பதும், வளர்ந்து வரும், அதிகரித்து வரும் இந்த நீர் அபாயத்தை சமாளிக்க சர்வதேச முயற்சிகளைத் தூண்டுவதுமே எங்கள் அறிக்கையின் நோக்கம் என்றார்.
அதிதீவிர மழை
இதுபற்றி அவர் மேலும் கூறுகையில், "வெள்ளம், அதிதீவிர மழை மற்றும் பிற தீவிர சுற்றுச்சூழல் நிகழ்வுகள் அதிகரித்து வருவால் அணையின் வடிவமைப்புகள் பலமாக இருந்தாலும் அவற்றின் பலத்தை கேள்விக்குள்ளாக்கும் வகையில் காலநிலை மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதை சுட்டிக்காட்டுவதே எங்கள் அறிக்கையின் நோக்கம். அணைகளை உருவாக்குவதை போல், அதை நீக்கி புதிய அணைகளை உருவாக்குவது குறித்தும் சிந்திக்க வேண்டியதும் அவசியம் என்றார்.
ஆராய்ச்சியாளர் பதில்
UNU-INWEH மூத்த ஆராய்ச்சியாளர் துமிந்தா பெரேரா கூறுகையில், இன்று பெரிய அணைகள் வயதாகும் பிரச்சனையை ஒப்பீட்டளவில் குறைந்த எண்ணிக்கையிலான நாடுகளையே எதிர்கொள்கின்றன- உலகின் பெரிய அணைகளில் 93 சதவீதம் வெறும் 25 நாடுகளில் அமைந்துள்ளது. பெரிய அணை கட்டுமானம் 20 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் உயர்ந்தது. 1960 களில் - 70 களில் குறிப்பாக ஆசியா, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவில் உயர்ந்தது, ஆப்பிரிக்காவில் 1980 களில் உருவானது. ஆனால் கடந்த நாற்பது ஆண்டுகளில் பெரிய அணை கட்டுமானத்தின் வேகம் வியக்க வைக்கும் அளவுக்கு வீழ்ச்சியடைந்து, தொடர்ந்து குறைந்து வருகிறது, ஏனெனில் "உலகளவில் இதுபோன்ற அணைகளுக்கான சிறந்த இடங்கள் படிப்படியாக குறைந்து வருகின்றன, ஏனெனில் உலகளாவிய நதி அளவுகளில் கிட்டத்தட்ட 50 சதவீதம் ஏற்கனவே துண்டு துண்டாகி அணைகளால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.
பழைய அணைகள்
அணைகளின் சுற்றுச்சூழல் மற்றும் சமூக தாக்கங்கள் குறித்தும், பெரிய அணைகள் குறித்தும் வலுவான கவலைகள் உள்ளன. அணைகள் பாதுகாப்பு, அதிகரிக்கும் பராமரிப்பு செலவுகள், நீர்த்தேக்கத்தில் குவியும் வண்டல் மற்றும் இயற்கை நதி சுற்றுச்சூழல் அமைப்பை மீட்டெடுப்பது ஆகியவற்றின் காரணமாக அணைகளை கட்டும் போதே வயதான அணைகளை நீக்கி மாற்று வழிகளை உருவாக்க வேண்டும் என்று ஐநா அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.