என்னை பதவியில் இருந்து நீக்கினால்... வன்முறை அதிகரிக்கும்... எச்சரிக்கும் டிரம்ப்
வாஷிங்டன்: அதிபர் பதவியிலிருந்து தன்னை நீக்கினால் வன்முறை பல மடங்கு அதிகரிக்கும் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் வெற்றி பெற்றார், இருப்பினும், இத்தேர்தலில் பெரும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக டிரம்ப் தொடர்ந்து ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன் வைத்து வந்தார்.
மேலும், தேர்தல் முடிவுகளை மாற்றவும் டிரம்ப் கடைசி வரை பல்வேறு முயற்சிகளை எடுத்தார். இருப்பினும், அதில் டிரம்பால் வெற்றி பெற முடியவில்லை.
Video: வாங்க வாஷிங்டன் வரை வாக்கிங் போய்ட்டு வரலாம்.. பயணங்கள் முடிவதில்லை!
அமெரிக்க நாடாளுமன்றத்தில் வன்முறை
ஜோ பைடனின் வெற்றியை அங்கீகரிக்கும் நிகழ்வு கடந்த 6ஆம் தேதி அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்றது. அப்போது உள்ளே புகுந்த டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதில் ஒரு காவலர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்தனர்.
பதவி நீக்க மசோதா
இந்த வன்முறைச் சம்பவத்திற்குப் பொறுப்பேற்று அதிபர் டிரம்ப் பதவி விலக வேண்டும் என்று ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த பலரும் வலியுறுத்தி வருகின்றனர். மேலும், டிரம்பை அதிபர் பதவியிலிருந்து நீக்கும் மசோதாவையும், அவர்கள் முன்மொழிந்தனர்.
வன்முறை அதிகரிக்கும்
இந்நிலையில் மெக்சிகோ எல்லையில் கட்டப்பட்டு வரும் சுவரைப் பார்வையிட்ட டிரம்ப், அதன் பின் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அதிபர் பதவியிலிருந்து தன்னை நீக்கினால் வன்முறை பல மடங்கு அதிகரிக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார். கடந்த புதன்கிழமை, அமெரிக்க நாடாளுமன்ற கட்டடத்தில் நடைபெற்ற சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்கவும் அவர் மறுத்துவிட்டார்.
பைடனுக்கு தான் ஆபத்து
சட்டப்பிரிவு 25ஐ பயன்படுத்துவதால் தனக்கு எவ்வித ஆபத்தும் இல்லை என்றும் அவர் தெரிவித்தார். அவ்வாறு தன்னை அதிபர் பதவியில் இருந்து நீக்க முயற்சி நடந்தால், அது அடுத்து அமையவிருக்கும் பைடன் அரசுக்கே அதிக ஆபத்துகளை ஏற்படுத்தும் என்று கூறிய டிரம்ப், இதனால் ஜனநாயகக் கட்சியினர் மிகக் கவனமாகச் செயல்பட வேண்டும் என்றும் கூறினார்.
பேசியது தவறில்லை
மேலும், ஆதரவாளர்களை நாடாளுமன்ற கட்டடத்தை முற்றுகையிட்டு, தேர்தல் முடிவுகளை மாற்ற அழுத்தம் தர வேண்டும் என வலியுறுத்தியது சரியான அணுகுமுறையே என்றும் அதில் தவறு இல்லை என்றும் டிரம்ப் குறிப்பிட்டார். கடந்த காலங்களில் அமெரிக்காவில் ஏற்பட்ட வன்முறைகளின்போது தலைவர்களைப் பேசியதுடன் ஒப்பிட்டால் தனது பேச்சு தவறானது இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.