உடலால் பிரிந்திருந்தாலும்... உள்ளத்தால் இணைந்திருப்போம்... பதவியேற்பு நாளில் கமலா நெகிழ்ச்சி
வாஷிங்டன்: கொரோனா பரவல் காரணமாக உடலால் பிரிந்திருந்தாலும் உள்ளத்தால் அமெரிக்கர்கள் இணைந்திருப்பதாகக் கமலா ஹாரிஸ் ட்வீட் செய்துள்ளார்.
அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடைபெற்றது. இத்தேர்தலில் 306 எலக்டோரல் வாக்குகளைப் பெற்று ஜோ பைடன் வெற்றி பெற்றார். அதிபர் டிரம்பால் வெறும் 232 எலக்டோரல் வாக்குகளை மட்டுமே பெற முடிந்தது.
அதேபோல இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கறுப்பினத்தவரான கமலா ஹாரிஸ் அந்நாட்டின் முதல் பெண் துணை அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இருவரும் இன்று பதவியேற்கவுள்ளனர்.
கமலா ஹாரிஸ் பொதுவாகவே ட்விட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கக் கூடியவர். இந்நிலையில், கமலா ஹாரிஸ் தனது கணவர் டக் எம்ஹாஃப், அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடன், அவரது மனைவி ஜில் பைடன் ஆகியோருடன் எடுத்த புகைப்படம் ஒன்றைத் தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
கொரோனா பரவல் காரணமாக உடலால் பிரிந்திருந்தாலும் உள்ளத்தால் அமெரிக்கர்கள் இணைந்திருப்பதாக அதில் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், கொரோனாவால் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதாகவும் அன்புக்குரியவர்களை இழந்தவர்கள் விரைவில் அதிலிருந்து மீளும் சக்தியைப் பெற பிராத்திப்பதாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜோ பைடன் இன்று பதவி ஏற்கவுள்ளார். அவருடன் அமெரிக்காவின் 49ஆவது துணை அதிபராகக் கமலா ஹாரிஸ் பதவியேற்கிறார்.
கமலா ஹாரிஸ் தனது மற்றொரு ட்வீட்டில், "பைடனும் நானும் இணைந்து நாட்டை ஒன்றிணைக்கும் பணிகளைத் தொடங்குகிறோம். நம் தேசம் எதிர்கொள்ளும் சவால்களைச் சமாளிக்கவும், அமெரிக்காவின் நன்மதிப்பைக் காப்பாற்றும் வகையில் நாங்கள் பணியாற்றுவோம்" என்று தெரிவித்துள்ளார்.