போலி விமானிகள்.. அதிர்ந்த அமெரிக்கா.. பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு தடை
வாஷிங்டன்: பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) நிறுவனம், அமெரிக்காவிற்கு விமானங்களை இயக்குவதற்கான அனுமதியை ரத்து செய்துள்ளதாக அமெரிக்க போக்குவரத்துத் துறை அறிவித்துள்ளது.
பாகிஸ்தானில் போலியாக பைலட் சான்றிதழ் பெற்று பணியில் சேர்ந்ததாக பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA) கவலை தெரிவித்ததை மேற்கோள் காட்டி இந்த முடிவை அமெரிக்கா எடுத்துள்ளது.
கடந்த மே மாதத்தில் பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸின் (பிஐஏ) விமானம் விபத்துக்குள்ளானதில் 97 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து சந்தேகத்திற்குரிய விமானிகளின் பைலட் சான்றிதழ்களை பரிசோதித்ததில் பலர் போலி என்பதை பாகிஸ்தான் கண்டுபிடித்தது.
ஆரம்பத்திலேயே விழித்துக் கொண்ட நியூசிலாந்து.. கொரோனா போரில் வெற்றி.. குவியும் பாராட்டு!
போலி விமானிகள்
தனது நாட்டு விமானிகளில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பகுதியினர் போலியாக பைலட் சான்றிதழ் பெற்று விமானியானவர்கள் என்பதை பாகிஸ்தான் கண்டுபிடித்து உலக நாடுகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. எப்படி போலியாக சான்றிதழ் பெற்று பணியில் சேர்ந்தார்கள் என்பது குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ளது
பதில் இல்லை
இதையடுத்து உடனடியாக ஐரோப்பிய ஒன்றிய விமானப் பாதுகாப்பு நிறுவனம், அடுத்த ஆறுமாதங்களுக்கு பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) நிறுவனம் விமானங்களை இயக்க தடை விதித்தது. இந்த விவகாரம் தொடர்பாக பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) நிறுவனம் உடனடியாக எந்த பதிலும் தெரிவிக்கவில்லை
விமானங்களுக்கு தடை
இதனிடையே பாகிஸ்தானில் போலி பைலட் சான்றிதழ் பெற்று பலர் பணிக்கு வந்திருப்பதாக பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் அண்மையில் கவலை தெரிவித்தது. இதையடுத்து அமெரிக்க போக்குவரத்து துறை அமைச்சகம், பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் (பிஐஏ) நிறுவனம், அமெரிக்காவிற்கு விமானங்களை இயக்குவதற்கான அனுமதியை ரத்து செய்துள்ளது.
நடவடிக்கை
பாகிஸ்தானின் ஜியோ நியூஸ், அமெரிக்காவின் தடையை பி.ஏ.ஏ உறுதிப்படுத்தியுள்ளது. விமான நிறுவனத்திற்குள் நடந்து வரும் சரியான நடவடிக்கைகள் மூலம் பிரச்சனைகள் சரி செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.