திருடுவதுதான் தொழில்.. கொரோனா வைரஸ் ஆராய்ச்சியை குறி வைத்த சீன ஹேக்கர்கள்.. அரண்டு போன அமெரிக்கா .
வாஷிங்டன்: அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் உள்ள நூற்றுக்கணக்கான நிறுவனங்களிடமிருந்து கோவிட் -19 தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் அறிவுசார் சொத்துக்களைத் திருட முயன்றதாக இரண்டு சீனர்கள் மீது அமெரிக்க நீதித்துறை குற்றம்சாட்டி உள்ளது.
Recommended Video
கொரோனா வைரஸ் தடுப்பு மருந்து மற்றும் தடுப்பூசி கண்டுபிடிக்கும் பணியில் இங்கிலாந்து, அமெரிக்கா, ரஷ்யா, சீனா, ஜெர்மனி, பிரான்ஸ், கனடா, இந்தியா, தாய்லாந்து, ஆஸ்திரேலியா, உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன. அதில் இங்கிலாந்து முன்னணியில் இருக்கிறது. அதற்கு அடுத்தபடியாக அமெரிக்கா, ரஷ்யா சீனா ஆகிய நாடுகள் உள்ளன.
இந்நிலையில் கொரோனா வைரஸ் தடுப்பு மருந்தை தங்கள் நாடு தான் முதலில் கண்டுபிடிக்க வேண்டும் என்கிற முனைப்பில் ஒவ்வொரு நாடும் செயல்பட்டு வருகின்றன. சில நாடுகள் தங்கள் நாடுகளின் தடுப்பூசியை திருட முயற்சிப்பாக குற்றச்சாட்டுகளும் எழுந்து வருகின்றன. அண்மையில் இங்கிலாந்தின் தடுப்பூசி தகவல்களை ரஷ்யா திருட முயன்றதாக புகார் எழுந்தது. இதை ரஷ்யா திட்டவட்டமாக மறுத்தது.
இருமல், தும்மலின் போது வரும் நீர் துளிகள்.. கொரோனா அச்சத்தை அதிகரித்த புதிய ஆய்வு.. ஷாக் தகவல்
திருட முயற்சி
இந்நிலையில் அமெரிக்கா தற்போது சீனாவின் போது பழி போட்டுள்ளது. தங்கள் நாடு தயாரிக்கும் கோவிட் -19 தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் அறிவுசார் சொத்துக்களைத் திருட சீன ஹேக்கர்கள் முயற்சிப்பதாக அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது. லி சியாயு, 34, மற்றும் 33 வயதான டோங் ஜியாஜி ஆகிய இரண்டு சீனர்கள் கொரோனா ஆராய்ச்சியை திருட முயன்றதாகவும், இவர்கள் அமெரிக்கா, சீனா மற்றும் ஹாங்காங்கில் உள்ள மனித உரிமை ஆர்வலர்களை குறிவைத்து செயல்பட்டதாகவும் தேசிய பாதுகாப்பு உதவி அட்டர்னி ஜெனரல் ஜான் டெமர்ஸ் தெரிவித்துள்ளார்.
சீனாவில் உள்ளார்கள்
இது தொடர்பாக அவர் மேலும் கூறும் போது, லி சியாயு, 34, மற்றும் 33 வயதான டோங் ஜியாஜி ஆகிய இருவரும் ஹேக்கர்கள் ஆவர். இவர்கள் அமெரிக்காவில் இல்லை. சீனாவில் இருப்பதாக நம்புகிறோம். அவர்கள் சில சந்தர்ப்பங்களில் "தங்கள் சொந்த லாபத்திற்காக" செயல்பட்டார்கள். ஆனால் அதேநேரம் சீனாவின் பாதுகாப்பு அமைச்சகத்தின் நலனுக்காகவும் செயல்பட்டுள்ளார்கள்:" என்று தெரிவித்தார்.
சீனாவின் சைபர் கிரைம்கள்
எஃப்.பி.ஐ துணை இயக்குனர் டேவிட் போடிச் இதே குற்றச்சாட்டை சீனா மீது வைத்தார். "சீன அரசாங்கத்தின் உளவுத்துறை சேவைகளால் இயக்கப்பட்ட சைபர் கிரைம்கள், அமெரிக்காவை மட்டுமல்ல, நேர்மையான செயல்படும், சர்வதேச விதிமுறைகள் மற்றும் சட்டத்தின் ஆட்சியை ஆதரிக்கும் அனைத்து நாட்டையும் அச்சுறுத்துகின்றன" என்று கூறினார்.
ரகசியங்கள் திருட்டு
அமெரிக்க வழக்கறிஞர் வில்லியம் ஹைஸ்லோப் கூறுகையில், ஹேக்கர்கள் உலகெங்கிலும் உள்ள நிறுவனங்களை குறிவைத்து செயல்படுகிறார்கள். அமெரிக்கா மற்றும் உலகெங்கிலும் உள்ள பல வணிகங்கள், தனிநபர்கள் மற்றும் ஏஜென்சிகளின் கணினி அமைப்புகளை ஹேக் செய்து தகவல்களை திருடுகிறார்கள். முக்கியமான மற்றும் மதிப்புமிக்க வர்த்தக இரகசியங்கள், தொழில்நுட்பங்கள், தரவு மற்றும் தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டுள்ளன" என்று கூறினார்.
பலரிடம் கைவைத்த ஹேக்கர்கள்
இதனிடையே அமெரிக்க நீதித்துறை இந்த ஹேக்கர்கள் பற்றி கூறும் போது, இந்த ஹேக்கிங்கின் இலக்குகளால் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள், அரசாங்கங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்ட அதிருப்தியாளர்கள், மதகுருமார்கள் மற்றும் அமெரிக்காவிலும் வெளிநாட்டிலும் உள்ள ஹாங்காங் மற்றும் சீனா உள்ளிட்ட ஜனநாயக மற்றும் மனித உரிமை ஆர்வலர்கள் உள்ளனர்" என்று நீதித்துறை தெரிவித்துள்ளது.