கட்டுக்கடங்காமல் போகும் வைரஸ்.. 45 நிமிடங்களில் கொரோனா கண்டறியும் சோதனைக்கு அமெரிக்காஅனுமதி
வாஷிங்டன்: கொரோனா பாதிப்பு இருக்கிறதா இல்லையா என்பதை விரைந்து கண்டறியும் சோதனைக்கு அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. அதன்படி 45 நிமிடங்களில் கொரோனா சோதனை முடிவுகள் கண்டறியப்படும்.
கொரோனா வைரஸ் உலக நாடுகளுக்கு சவாலாக உள்ளது. அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து இந்த கொரோனாவை ஒழிக்க பல தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.
எனினும் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அமெரிக்காவில் கொரோனா வேகமாக பரவி வருகிறது. சனிக்கிழமை நிலவரப்படி 302 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளனர்.
தலைநகர் வாஷிங்டன்னில் மட்டும் 94 பேரும், நியூயார்க்கில் 53 பேரும், இறந்துள்ளனர். கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23 ஆயிரமாக உயர்ந்துள்ளது. இதில் பாதி பேர் நியூயார்க்கை சேர்ந்தவர்கள்.
இதையடுத்து மக்கள் வீட்டை விட்டு வர வேண்டாம் என அமெரிக்கா அறிவுறுத்தியுள்ளது. இந்த நிலையில் கொரோனா வைரஸ் அறிகுறி தென்படுபவர்களை கண்டறிந்து அவர்களிடம் ரத்த மாதிரிகளை சேகரித்து அமெரிக்க ஆய்வகங்களில் சோதனைக்கு கொடுக்கும் போது முடிவுகள் வரவே 2 அல்லது 3 நாட்கள் ஆகிறது.
இந்தியாவில் முதல்முறையாக தனியார் லேப்களிலும் கொரோனா பரிசோதனைக்கு அனுமதி.. ரூ. 4500 நிர்ணயம்
அதற்குள் நோயின் தாக்கம் அதிகரித்துவிடுகிறது. நோய் பரவலையும் கட்டுப்படுத்த முடியவில்லை. இதனால் கொரோனா விரைவு பரிசோதனை செய்ய அமெரிக்கா அனுமதி அளித்துள்ளது. இதற்கான அனுமதியை அமெரிக்க உணவு மற்றும் மருந்துத் துறை நிர்வாகம் (எஃப்டிஏ) அளித்துள்ளது.
இதை கண்டறிந்தது கலிபோர்னயாவை சேர்ந்த மருந்து நிறுவனமாகும். இந்த கிட்டை பயன்படுத்தினால் ஒருவருக்கு கொரோனா இருக்கிறதா இல்லையா என்பது 45 நிமிடங்களில் தெரியவரும்.
முதலில் இந்த சோதனை கிட்டை மருத்துவமனைகள் மற்றும் அவசர சிகிச்சை பிரிவுகளில் பயன்படுத்த திட்டமிட்டுள்ளது. அடுத்த வாரம் இவை அந்த மருத்துவமனைகளுக்கு அனுப்பப்படவுள்ளது.