பெரும் வன்முறை.. கேப்பிட்டல் கட்டிடத்தை சூறையாடிய டிரம்ப் ஆதரவாளர்கள்! உள்ளே பூட்டப்பட்ட எம்.பிக்கள்
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் ஆதரவாளர்கள் அத்துமீறி கேப்பிட்டல் கட்டிட வளாகத்துக்குள் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. காவல்துறையை மீறி போராட்டக்காரர்கள் வன்முறை வெறியாட்டம் நடத்தியதால் கேப்பிட்டல் கட்டிடம் பூட்டப்பட்டது. துணை அதிபர் மைக் பென்ஸ் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்.
நடைபெற்று முடிந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் வேட்பாளர் ஜோ பிடன் அதிக ஓட்டுகளைப் பெற்று வெற்றி பெற்றுள்ளார். ஆனால், இந்த வெற்றியை ஏற்க மறுத்து வருகிறார் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப்.
தேர்தலில் முறைகேடு நடந்துள்ளதாக அவர் குற்றம் சாட்டி வரும் நிலையில் அதற்கான ஆதாரங்களை சமர்ப்பிக்க முடியவில்லை. எனவே, தேர்தல் முறைகேடு வழக்குகள் பலவும் நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டன.
அதிரடி.. டிரம்ப்புக்கு எதிராக திரும்பிய துணை அதிபர் மைக் பென்ஸ்! அரசியல் சாசனப்படி நடப்பேன் என உறுதி
கண்டன பேரணி
ஆனால் அவரது ஆதரவாளர்கள் தலைநகர் வாஷிங்டனில் இன்று மாபெரும் கண்டன பேரணிகளை நடத்தினர். இதில் டொனால்ட் ட்ரம்ப் பங்கேற்றார். இந்த நிலையில்தான் வாஷிங்டனில் உள்ள கேப்பிட்டல் கட்டிடத்தில், காங்கிரசின் கூட்டு கூட்டத்தில், செனட் உறுப்பினர்கள் ஒன்றுகூடியிருந்தனர். எலக்ட்டோரல் காலேஜ் வாக்குகளை பரிசீலனை செய்து சான்றிதழ் அளிக்கும் பணி துவங்கியது. இந்த பணி நடைபெற்றால், ஜோ பிடன் வெற்றியாளர் என்பது தீர்மானிக்கப்பட வாய்ப்பு இருந்தது.
அராஜகம்
ஆனால், இதை தடுக்கும் விதமாக கேப்பிட்டல் கட்டிடத்திற்குள் டொனால்ட் ட்ரம்ப் ஆதரவு போராட்டக்காரர்கள் புகுந்து விட்டனர். காவல்துறையினர் அவர்களை தடுக்கும் முயற்சி தோல்வியில் முடிந்தது. அங்கு வைக்கப்பட்டு இருந்த தடுப்புகளை உடைத்து எறிந்து கொண்டு அவர்கள் உள்ளே நுழைந்தனர். ஒட்டுமொத்த கட்டிடத்தையும் முற்றுகையிட்டு கிட்டத்தட்ட தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டனர்.
வரலாற்றில் இல்லாத நிகழ்வு
இதையடுத்து கேப்பிட்டல் கட்டிடத்தின் கதவுகள் அனைத்தும் மூடப்பட்டு, பல செனட் உறுப்பினர்கள் உள்ளேயே பாதுகாப்பாக வைக்கப்பட்டனர். துணை அதிபர் மைக் பென்ஸ் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். அமெரிக்க வரலாற்றில் இது போல ஒரு மோசமான நிகழ்வு நடைபெற்றது கிடையாது என்று அந்த நாட்டு ஊடகங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
வாஷிங்டன்னில் ஊரடங்கு
இந்த நிலையில் வாஷிங்டனில் ஊரடங்கு உத்தரவு அமல் படுத்துவதாக நகர மேயர் அறிவித்துள்ளார். புதன்கிழமை மாலை 6 மணி முதல் வியாழக்கிழமை காலை 6 மணி வரை, எந்தவொரு நகர சாலையிலும் அல்லது பொது இடத்திலும் கார், பைக் அல்லது பிற போக்குவரத்து மூலம் பயணம் செய்ய யாருக்கும் அனுமதி கிடையாது என்று, மேயர் பவுசர் தெரிவித்தார். முன்னதாக தேர்தல் வெற்றி செல்லாது என்று டொனால்ட் டிரம்ப் கூறியதை அப்படியே வழிமொழிய முடியாது என்றும், அரசியல் சாசனப்படித்தான் தான் செயல்பட முடியும் என்றும் துணை அதிபர் பென்ஸ் தெரிவித்து விட்டார். இது போராட்டக்காரர்களை மேலும் கோபப்படுத்திவிட்டதாக கூறப்படுகிறது.