டிரம்பை பதவியில் இருந்து நீக்க சொந்த கட்சி எம்பிக்களே ஆதரவு
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் பதவி காலம் முடிய இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், அவரை பதவியில் இருந்து நீக்கும் தீர்மானத்திற்கு அவரது சொந்தக்கட்சியான குடியரசுக்கட்சி எம்பிக்ககள் கூட ஆதரவு தெரிவித்துள்ளனர்.
கடந்த நவம்பர் மாதம் நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றி பெற்றார். ஆனால், போதிய ஆதாரம் இன்றி தேர்தல் முறைகேடு நடந்துவிட்டதாக குற்றம்சாட்டி வருகிறார் டிரம்ப். அத்துடன் தேர்தல் முடிவுகளை ஏற்க மறுத்தார். இதனால் ஆட்சி மாற்றம் சுமுகமாக நடக்குமா என்ற கவலை எழுந்தது.
இந்த சூழலில் அண்மையில் அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடமான கேபிடல் மீது டிரம்ப் ஆதரவு கும்பலைச் சேர்ந்தவர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இதனால் அதுவரை டிரம்ப் சுமூகமாக பதவி விலகுவாரா மாட்டாரா என்ற பயந்தவர்கள், டிரம்பை பதவியில் இருந்து தூக்கி எறிந்து வெளியேற்றவும் இப்போது தயாராகி விட்டனர். டிரம்ப் ஆதரவு வன்முறை கும்பலின் செயல்பாட்டை அமெரிக்கா முழுவதும் பலரும் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கினர். மொத்த உலகமும் டிரம்பிற்கு எதிராக பேசியதுடன் ஜனநாயகத்தின் மீதான தாக்குதல் என்று கண்டனம் தெரிவித்தன.
உண்மையான குற்றச் சம்பவத்தின் அடிப்படையில் டிரம்ப்புக்கு எதிராக விவாதம்..ஜிம் மெகாகவர்ன் எம்பி பேச்சு
எதிர்த்து வாக்கு
அத்துடன் தற்போது சொந்த கட்சியான ஆளும் குடியரசு கட்சி உறுப்பினர்களும் டிரம்பை பதவியில் இருந்து நீக்க ஆதரவு தெரிவித்துள்ளனர். அமெரிக்க நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவையில் குடியரசுக் கட்சி மூன்றாவது மூத்த உறுப்பினரான லிஸ் செனீ, கேபிடல் வன்முறை விவகாரத்தில் அதிபர் டிரம்ப் மீது நாடாளுமன்றத்தில் கண்டனத் தீர்மானம் கொண்டுவந்தால் அதை ஆதரித்து வாக்களிப்பேன் என்று கூறியிருந்தார்.
ஆதரிக்க மறுப்பு
இதேபோல் ஜான் காட்கோ, ஆடம் கின்சிங்கர் ஆகிய குடியரசுக் கட்சி உறுப்பினர்களும் கண்டனத் தீர்மானத்தை ஆதரிக்கப் போவதாக கூறியுள்ளார்கள். எனினும் குடியரசுக் கட்சி முன்னவர் கெவின் மெக்கார்த்தி கண்டனத் தீர்மானத்தை ஆதரிக்க முடியாது என்று கூறினார்.
எதற்காக
நாடாளுமன்றத்தில் கலவரம் செய்யத் தூண்டியதாக அதிபர் டிரம்ப் மீது வைக்கப்படும் குற்றச்சாட்டின் மீது இன்று அவையில் வாக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. பிரையன் ஃபிட்ஸ்பாட்ரிக் என்ற என்ற பென்சில்வேனியா நாடாளுமன்ற உறுப்பினர், சென்ஷ்யூர் என்ற கண்டனத் தீர்மானத்தை நேற்று முன்மொழிந்தார். நவம்பரில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை சட்டவிரோதமாக மாற்றியமைக்க முயன்றதாகவும், அரசாங்கத்தின் இணைப் பிரிவினை பாதிப்புக்கு உள்ளாக்கியதாகவும் அவர் மீது தீர்மானத்தில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
மைக் பென்ஸ் நிராகரிப்பு
25-வது சட்டத் திருத்தத்தைப் பயன்படுத்தி டிரம்பை பதவியில் இருந்து நீக்கவேண்டும் என்று துணை அதிபர் மைக் பென்ஸை வலியுறுத்தும் தீர்மானம் பிரதிநிதிகள் அவையில் 223க்கு 205 என்ற அளவில் நேற்று (இன்று அதிகாலை) நிறைவேறியது. ஆனால், அந்த தீர்மானத்தை ஏற்க மைக் பென்ஸ் நிராகரித்துவிட்டார்.
தவறான முன்னுதாரணம்
அவைத் தலைவர் நான்சி பெலோசிக்கு அவர் எழுதிய கடிதத்தில், நமது அரசமைப்புச் சட்டத்தில் 25வது திருத்தம் என்பது தண்டனை வழங்குவதற்கானது அல்ல என்று குறிப்பிட்ட மைக் பென்ஸ். இது போன்ற சூழ்நிலையில் 25வது சட்டத் திருத்தத்தை பயன்படுத்துவது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும் என்றார்.
குடியரசு கட்சியினர்
இதனிடையே நியூயார்க் டைம்ஸ் வெளியிட்ட செய்திகளின் படி, ஜனநாயக கட்சியினர் கண்டனத் தீர்மானம் கொண்டுவர முடிவு செய்திருப்பது தமக்கு மகிழ்ச்சி என்றும் டிரம்பை குடியரசுக் கட்சியில் இருந்து நீக்க வழி பிறக்கும் என்றும் செனட் அவையின் குடியரசுக் கட்சி முன்னவர் மிட்ச் மெக்கனல் தனக்கு நெருக்கமானவர்களிடம் கூறியிருக்கிறார்.
பெரும்பான்மை தேவை
இது, ஜனநாயக கட்சியினர் கண்டனத் தீர்மானம் அமெரிக்க நேரப்படி காலை 9 மணிக்கு அதாவது இந்திய நேரப்படி 7.30மணிக்கு தொடங்குகிறது. . கண்டனத் தீர்மானம் நிறைவேறினால், செனட் அவையில் அவர் மீது விசாரணை நடக்கும். செனட்டில் அவர் மீதான குற்றத்தை உறுதி செய்ய மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை. இதனால், குறைந்தது 17 குடியரசுக் கட்சியினர் டிரம்புக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். 2024ஆம் ஆண்டில் மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிட திட்டமிட்டுள்ளதாக டிரம்ப் கூறியிருந்த நிலையில், அவரை மீண்டும் போட்டியிடவிடாமல் தடுப்பதற்கு பதவிநீக்க குற்றச்சாட்டு விசாரணையை செனட் பயன்படுத்த வாய்ப்பு உள்ளது..