அமெரிக்க வன்முறை கும்பலுடன் தொடர்பு... 2 போலீஸ் அதிகாரிகள் சஸ்பெண்ட்..ஒருவர் கைது!
வாஷிங்டன்: அமெரிக்க நாடாளுமன்ற வன்முறை கும்பலுடன் தொடர்பில் இருந்த கேப்பிட்டல் போலீசார் அதிகாரிகள் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக அமெரிக்கா கேபிடல் காவல்துறைத் தலைவர் ஸ்டீவன் சுண்ட் தனது பதவியை ராஜினாமா ஏற்கனவே செய்தார்.
அமெரிக்க நாடாளுமன்றத்தில் சில நாட்களுக்கு முன்பு டிரம்ப் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறையில் 5 பேர் உயிரிழந்தனர்.
கடும் வன்முறை
அமெரிக்க அதிபர் தேர்தலில் அதிபர் டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன் அபார வெற்றி பெற்றார். அவரது தேர்தல் வெற்றியை உறுதி செய்து, அதற்கான சான்றிதழை வழங்கும் பணிகளை அமெரிக்கா நாடாளுமன்றம் மேற்கொண்டது. அப்போது, டிரம்ப் ஆதரவாளர்கள் நாடாளுமன்ற கட்டிடத்திற்குள் நுழைந்து வன்முறையில் ஈடுபட்டனர்.
தலைவர்கள் கண்டனம்
போலீசார் அவர்களை கட்டுப்படுத்த முயன்றனர். இரு தரப்பினருக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. இந்த வன்முறையில் போலீஸ் அதிகாரி உள்பட 5 பேர் இறந்தனர்.அமெரிக்க நாடாளுமன்றத்தில் முன் எப்போதும் இல்லாத அளவில் நடந்த வன்முறை உலகளவில் அதிர்வுகளை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
காவல்துறைத் தலைவர் ராஜினாமா
இந்த வன்முறை சம்பவம் தொடர்பாக ஏராளமானோர் தொடர்ந்து கைது செய்யபப்ட்டு வருகின்றனர். வன்முறையை தடுக்க தவறியதாக கேப்பிட்டல் போலீசார் மீது பல்வேறு தரப்பினர் குற்றம்சாட்டினர். இதனை தொடர்ந்து அமெரிக்கா கேபிடல் காவல்துறைத் தலைவர் ஸ்டீவன் சுண்ட் தனது பதவியை ராஜினாமா செய்தார்.
2 பேர் பணியிடை நீக்கம்
இந்த நிலையில் வன்முறை கும்பலுடன் தொடர்பில் இருந்த கேப்பிட்டல் போலீசார் 2 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக ஜனநாயகக் கட்சியின் பிரதிநிதி டிம் ரியான் கூறியதாவது:- அமெரிக்க கேபிட்டல் வன்முறையில் ஈடுபட்ட அதிபர் டொனால்ட் டிரம்பின் ஆதரவாளர்களுடன் தொடர்பில் இருந்த அமெரிக்க கேபிடல் போலீசார் அதிகாரிகள் 2 பேர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மற்றோரு போலீஸ் அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். நாங்கள் கேபிடல் காவல்துறையினருடன் நம்பிக்கையை மீண்டும் நிலைநாட்ட வேண்டும் என்று டிம் ரியான் கூறினார்.